தூசுமூட்டம்: கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றுத்தூய்மைக் கேடு மோசமடைகிறது

நேற்றுக் காலை தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் தூசு மூட்டம் மோசமடைந்து வருவதை அடுத்து காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) அளவீடுகளும் அதிகரித்து வருகின்றன.

நேற்று காலை 10 மணிக்கு சுற்றுச் சூழல் துறை மேற்கொண்ட ஆய்வில் கிள்ளானில் காற்று மாசுபாடு 91 ஆகவும் ஷா ஆலமில் 96ஆகவும் புத்ரா ஜெயாவில் 99 ஆகவும் பெட்டாலிங் ஜெயாவில் 100 ஆகவும் செராசில் 101 ஆகவும் பதிவானது.

இன்று காலை முன்சொன்ன இடங்களில் ஏபிஐ 119 ஆகவும் அதற்கு மேலாகவும் உயர்ந்திருந்தது.

கிள்ளானில் 119, ஷா ஆலமில் 125, புத்ரா ஜெயாவில் 134, பெட்டாலிங் ஜெயாவில் 134, செராசில் 140 என்று இருந்தது.

ஏபிஐ 51 முதல் 100 வரை இருப்பது ஒரு மிதமான தூய்மைக்கேட்டு நிலை. இதனால் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு இல்லை.

101 முதல் 200 வரையிலான ஏபிஐதான் சுகாதாரத்துக்குக் கேடு செய்யும் தூய்மைக்கேடு. இது இதயம் மற்றும் நுரையீரல் பிரச்னை உள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும்