‘விக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை’ – தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்

லேண்டர் விக்ரம் வேகமாக தரை இறங்கியதால் அது சாய்ந்துள்ளதே தவிர உடைந்துவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர், நிலவில் கால் பதிக்க 2.1 கி.மீ. மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அதனுடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

“சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், வேகமாக தரை இறங்கியதால் 4 கால்களில் நிற்காமல் சாய்ந்துள்ளது. ஆனால், அது உடைந்துவிடவில்லை. மாறாக, ஒரே தொகுப்பாக காட்சி அளிக்கிறது. லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. தரை இறங்கத் திட்டமிட்டிருந்தப் பகுதிக்கு அருகில் லேண்டர் விழுந்துள்ளது.

லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இதில் ஈடுபடுவதற்கு 14 நாட்கள் வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் இழந்த தகவல் தொடர்பை மறுபடியும் மீட்ட நிகழ்வுகள் உண்டு. அது போல லேண்டருடன் தகவல் தொடர்புக்காக முயற்சிக்கிறோம். நமது முயற்சி எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது” என்று விஞ்ஞானிகள் கூறியதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

-தினமணி

TAGS: