சீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர் தொழிலாளர்களுக்கு என்ன இழப்பு?

எந்தத் தொழிலும் தெரியாமல், உள்ளூர் மொழியான தமிழும் தெரியாமல் திருப்பூர் நகரத்துக்கு காலையில் வந்திறங்கியவர்கள், ஐந்து தெருக்களில் அலைந்து திரிந்து, பத்து பின்னலாடை நிறுவனப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் அன்றைய பொழுது சாய்வதற்குள் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும்.

இது ஒருவேளை மிகையாக தெரியலாம். ஆனால், கடந்த இரண்டு – மூன்று ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் இதுதான் உண்மை நிலவரம். இப்போது அப்படி இல்லை.

‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று எழுதப்பட்ட பதாகைகளால் நிரம்பியிருந்த ஊரில், தொழில் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டதால், ‘கட்டடம் வாடகைக்கு விடப்படும்’ என்ற பதாகைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

சுமார் 10 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் இந்த நகரின் போக்குவரத்து நெரிசல் இந்தியாவின் மெட்ரோ நகரங்களுக்கு இணையானதாகவே இருந்தது. அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பட்டன்கள் முதல் துணி மூட்டைகள் வரை சுமந்து சென்றவை.

“முன்பெல்லாம் இங்கு வாகனப் போக்குவரத்தால் உண்டாகும் இரைச்சலால் கடைக்குள் அமர்ந்திருக்கவே முடியாது. கடந்த ஐந்து – ஆறு மாதங்களாக இங்கு ஆள் நடமாட்டமே இல்லை” என்கிறார், திருப்பூரின் பிரபலமான ‘பனியன் பஜாரில்’ 15 ஆண்டுகளாக கடை வைத்திருக்கும் தேவி.

திருப்பூர்
Image captionதிருப்பூரில் போக்குவரத்தும் நலிந்து போனதோ?

மதிய நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கூட பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான மாதிரிகளைக் கொண்டு செல்பவராகவோ, தொழில் தொடர்பான பரிமாற்றத்துக்காக வங்கிக்குச் செல்பவராகவோ இருக்கவே அதிக வாய்ப்புண்டு.

சமீப மாதங்களில் நல்ல மழை பொழிந்து, வெப்பம் தணிந்து ரம்மியமான சூழல் இருக்கும்போதும் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்த சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சாலைகள் முதல் மக்கள் முகங்கள் வரை பொருளாதார சரிவின் வாட்டம் தெரிகிறது.

“ராஜஸ்தானில் வேலை இல்லை என்றுதான் இங்கு வந்தேன். ஜி.எஸ்.டி வரி அமலானபின் இங்கும் அதிகம் வேலை இல்லை. எங்கள் கடையில் வியாபாரம் நடந்தே மூன்று நாட்கள் ஆகின்றன,” என்கிறார் பின்னலாடை மொத்த வணிகக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் கிருஷ்ணா.

ஜி.எஸ்.டி அமலானபின் வியாபாரம் பெருமளவு குறைந்துள்ளது என்கிறார் கிருஷ்ணா.
Image captionஜி.எஸ்.டி அமலானபின் வியாபாரம் பெருமளவு குறைந்துள்ளது என்கிறார் கிருஷ்ணா.

“என்னை நம்பிக்கொண்டு என் அம்மாவும் அப்பாவும் ராஜஸ்தானில் இருக்கிறார்கள். நானோ இங்கு வருவாய் இல்லாமல் சிரமப்படுகிறேன்,” என்கிறார் 21 வயதாகும் அந்தத் தொழிலாளி.

சிறு தொழில்களைச் சார்ந்துள்ள பெரும் தொழில்கள்

சீனா, வங்கதேசம் போன்ற பின்னலாடை உற்பத்தி செய்யும் நாடுகளில் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் உற்பத்தி செய்யப்படும் வகையிலேயே பெரும்பாலான நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், திருப்பூரில் நிலைமை அப்படியல்ல. துணிக்கு சாயமிடப்படுவது ஓர் இடத்தில் நடக்கும், துணிகளில் அச்சிடப்படுவது ஓர் இடத்தில் நடக்கும், பட்டன் வைப்பது முதல் லேபிள் ஓட்டுவது வரை நிறுவனத்தில் அல்லாமல் ‘ஜாப் வொர்க் யூனிட்’ எனப்படும், நிறுவனத்துக்கு வெளியில் அமைத்துள்ள சிறு தொழில் கூடங்களில் நடக்கும்.

இதன் காரணமாக இயந்திரங்களைவிட மனிதர்களை நம்பியே அதிகம் தொழில் நடக்கும். இப்போது பொருளாதார மந்தநிலை உண்டாக்கிய பாதிப்பு அதிகமாகவும் பரவலாகவும் இருக்க அதுதான் காரணம்.

வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் திருப்பூர் வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கே மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கிவிட்டனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில் ஏறிச் செல்வது இப்போதெல்லாம் திருப்பூர் ரயில் நிலையத்தில் இயல்பான காட்சியாகிவிட்டது.

திருப்பூரில் பிரச்சனை என்ன?

பல நூறு கோடி ரூபாய் முதல் சில ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்கள்கூட சிறு சிறு ‘ஜாப் வொர்க் யூனிட்’கள் துணையுடன் இயங்குவது திருப்பூரில் இயல்பான ஒன்று.

திருப்பூர்
Image captionசொந்த ஊர் திரும்பும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு திரும்பவும் வருவதற்கான உத்தரவாதம் இல்லாவிட்டாலும் நம்பிக்கை மட்டுமே உள்ளது.

இந்த சிறு நிறுவனங்கள் பெரும்பாலும் பணத்தை ரொக்கமாகவே புழங்கி வந்தன. 2016-இல் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபின் இவை அனைத்தும் நிலைகுலைந்தன. அடுத்த சில வாரங்களுக்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவே முடியாத நிலை இருந்தது.

பின்னர் ஜி.எஸ்.டி என்று பரவலாக அறியப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலானபின் அதிகமான வரி விகிதம், வரி விகிதத்தில் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், கூடுதலாக செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதில் உண்டான தாமதம், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் அடுத்த அடியாக விழுந்தன.

எரியும் நெருப்பில் ஊற்றப்படும் எண்ணெய்

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்துள்ளன சர்வதேச காரணிகள். ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியில் தற்போது இந்தியாவுக்கு பெரும் போட்டியாக உருவெடுத்துள்ளது அண்டை நாடான வங்கதேசம்.

ஆயத்த ஆடைகளை சீனாவில் இருந்து வங்கதேசத்துக்கு இறக்குமதி செய்தால் வரி விலக்கு உள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் செலுத்த வேண்டிய வரியைவிட வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு இயக்குமதி செய்தால் செலுத்த வேண்டிய வரி குறைவு. அதனால், சீன சரக்குகள் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைகின்றன.

முத்து ரத்தினம்
Image captionமுத்து ரத்தினம்

“திருப்பூரில் இருந்து ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை வாங்கிவந்த இந்தியாவின் பெரு நிறுவனங்களே வங்கதேசத்தின் பக்கம் திரும்பி விட்டன. அதனால் உள்நாட்டு வர்த்தகம் குறைந்துள்ளது. வெளிநாடுகளில் பெரிய அளவில் ஆர்டர்கள் கொடுத்து வந்த நிறுவனங்களும், அங்கு பெரும்பாலும் ஆன்லைன் மூலம் ஆடை வாங்கும் வழக்கம் அதிகமாகியுள்ளதால் கடைகளை மூடி வருகின்றனர். வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட குறைவான செலவில் உற்பத்தி செய்வதால் சர்வதேச இறக்குமதியாளர்கள் அங்கு செல்கின்றனர். அதனால் ஏற்றுமதியும் சுமார் 50% சரிந்துள்ளது,” என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி. முத்து ரத்தினம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தாலும், அதனால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் பலன் இல்லை.

“ரூபாய் மதிப்பு சரிந்தால் இழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்ட நாளில் ரூபாய் மதிப்பு என்னவாக இருந்ததோ, அதே ரூபாய் மதிப்பையே ஏற்றுமதியான பின்னும் பின்பற்றப்படும் வகையில் ‘ஃபார்வார்டு காண்ட்ராக்ட்’ செய்து கொள்ளும் வழக்கமே 90% ஏற்றுமதியாளர்களுக்கு உள்ளது. அதனால் டாலர் மதிப்பு அதிகரித்தாலும் அதனால் பலன் பெறுபவர்கள் மிகச் சிலரே, ” என்கிறார் முத்து ரத்தினம்.

சீன - வங்கதேச கூட்டணியால் திருப்பூர் தொழிலாளர்களுக்கு என்ன இழப்பு

தீர்வுக்கு என்ன வழி?

வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் சீன சரக்குகளை கட்டுப்படுத்த, வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு வரியை அதிகரிக்க வேண்டும் என்பது பின்னலாடை துறையினரின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது.

பஞ்சுப் பதுக்கல் காரணமாக அதன் விலை உயர்வதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். பஞ்சு வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ஏற்றுமதி செய்யும்போது செலுத்தப்பட்ட வரிகளை திரும்பப் பெறுவது (duty drawback) போன்ற ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்குவது, ஒரே துறையில் பயன்படும் வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு வரி விகிதம் போன்ற ஜி.எஸ்.டி வரியில் உள்ள சிக்கல்களைக் களைவது ஆகியவை உள்நாட்டுச் சந்தைகளுக்கு விற்பவர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. -BBC_Tamil

TAGS: