தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடக்கிறது

மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் இன்று வாக்களிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

2018 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் குறுகிய பெரும்பான்மையில் அத்தொகுதியை வென்றது. அதனிடமிருந்து அத் தொகுதியைத் தட்டிப் பறிக்க தேசிய முன்னணி (பிஎன்) பாஸுடன் இணைந்து முவாபகாட் நேசனல் என்னும் கூட்டணியை அமைத்து களத்தில் இறங்கியுள்ளது.

இந்த தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் ஆறு-முனைப் போட்டியாகும்.

பக்கத்தான் ஹரப்பானின் கர்மாய்ன் சார்டினி, பிஎன்னின் வீ ஜெக் செங்,, கெராக்கானின் வெண்டி சுப்ரமணியம், பெர்ஜாசாவின் பத்ருல்ஹிஷாம் அப்துல் அசிஸ் ஆகியோருடன் இரு சுயேச்சைகளும்- அங் சுவான் லொக், பரிடா அர்யானி அப்துல் கப்பார்- போட்டியிடுகின்றனர்.

52,698 வாக்காளர்களைக் கொண்ட தொகுதி தஞ்சோங் பியாய். அவர்களில் 57 விழுக்காட்டு வாக்காளர்கள் மலாய்க்காரர்கள், 42 விழுக்காடு சீனர்கள்.

27 வாக்களிப்பு மையங்கள் காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன. வாக்களிப்பு மாலை மணி 5.30வரை நடக்கும்.