இயோ: டிபிகேஎல்-லுக்கு இலவச சட்ட உதவி ஏன்?

தாமான் ரிம்பா கியாரா மேம்பாடு தொடர்பான சச்சரவில் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்துக்குப் பிரபல வழக்குரைஞர் இலவச சட்ட உதவி வழங்குவதற்குக் கூட்டரசுப் பிரதேச அமைச்சு அளித்துள்ள விளக்கம் நியாயமாகப் படவில்லை என்கிறார் செகாம்புட் எம்பி ஹன்னா இயோ.

நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார ஊராட்சி அமைப்பு டிபிகேஎல்தான். அதற்கு கோபால் ஸ்ரீராமின் இலவச சட்ட உதவி தேவையில்லை என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் ஹன்னா கூறினார்.

“தாமான் ரிம்பா கியாராவின் ஒரு பகுதியில் மேம்பாட்டுப் பணிகளுக்கு எதிராக போராடி வருகிறார்களே குடியிருப்பாளர்கள் அவர்களுக்குத்தான் இலவச சட்ட உதவி தேவை

“டிபிகேஎல்-லுக்கு உதவி தேவையில்லை. அதனிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது”, என்று ஹன்னா கூறியதாக த மலேசியன் இன்சைட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நேற்றிரவு விடுத்த ஓர் அறிக்கையில் கூட்டரசு அமைச்சு அலுவலகம் டிபிகேஎல் வழக்கை நடத்துவதற்கு ஸ்ரீராமுக்கு பெரும்பணம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தது.

ஸ்ரீராமுக்கு டிபிகேஎல் பணம் கொடுக்கத் தயாராக இருந்தது. ஆனால் அவர் இலவசமாகவே சட்ட உதவி அளிக்க முன்வந்தார் என்று அமைச்சர் அலுவலகம் கூறிற்று.