மலாக்கா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் இருவரின் நடத்தையில் அன்வார் அதிருப்தி

மலாக்கா சட்டமன்றத்தில் மாநில அரசு கொண்டுவந்த ஒரு தீர்மானம் இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தவறியதால் தோல்வி கண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அன்வார் இப்ராகிம் வருணித்தார்.

“அவர்களைத் தொடர்பு கொண்டு வருகிறேன். இன்று அவர்களைச் சந்திப்பேன் அல்லது அவர்களோடு பேசுவேன்”, என பிகேஆர் தலைவர் கூறினார்.

“அது(அவர்களின் செயல்) ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனென்றால், மாநில அரசின் முடிவுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். முதலமைச்சர் செய்யும் முடிவுகளை ஏற்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு”, என்றாரவர்.

நேற்று, மலாக்கா பிகேஆர் தலைவர் அப்துல் ஹாலிம் பாசிக்கை செனட்டராக நியமிக்கும் தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அது 12 ஆதரவு-வாக்குகளையும் 13 எதிர்-வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டது. வாக்களிப்பின்போது பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர் இருவர் அவையில் இல்லை.