சோசலிசம் 2019 : ‘புதிய மலேசியாவில் என்னதான் புதிது?’

யோகி | 2005-ஆம் ஆண்டு ஈராக்கில் போர் நடந்து கொண்டிருந்தது. உலக மயமாக்கலின் நவதாராளவாத போக்கானது, பெருநிறுவன டிஜிட்டல் பொருளாதாரத்தின் மத்தியில் திடீர் மாற்றம் நிகழ்த்தியது.  முதலாளித்துவத்தின் சித்தாந்தந்தை உலக தராசில் வைக்கும்போது, சோசலிச சித்தாந்தம் ஒரு மூலையில் தள்ளப்பட்டு கவனிக்கப்படாத, மதிக்கப்படாத நிலைக்கு ஆளானதாக தெரிந்தது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில்தான் மலேசியாவில் முதல் முறையாக சோசலிசக் கருத்துக்களம் ஏற்பாடு செய்யப்பட்டது. மலேசியாவைப் பொறுத்தவரை, சோசலிசம் வெறும் கற்பனாவாதம் எனும் வலை பின்னலுக்குள் தள்ளப்பட்டாலும், அதிலிருந்து தன்னை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து, நாட்டின் பிரதான நீரோட்டத்திற்கு எதிராக போராடி, மாய அரசியலையும்  எதார்தத்தையும் மக்களுக்குக் காட்டி வருகிறது மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்). மலேசியாவில் நடந்த முதல் கருத்துக்களத்திற்கு ‘ஜீவன்’’ என அது பெயரிட்டிருந்தது.

அன்று தொடக்கம், ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கருத்துக்களத்தினை மலேசிய சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்துவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, 15-வது சோசலிசக் கருத்துக்களத்தினை நடத்தி முடித்திருக்கும் அக்கட்சி, ‘புதிய மலேசியாவில் புதியது என்ன?’ என்றக் கருப்பொருளை அதற்கு வைத்திருந்தது.

2020 தூர நோக்கு இலக்கு குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயித்த கனவின் உண்மை தோற்றம் இன்னும் சில நாட்களில் வரவேற்க இருக்கும் 2020-தோடு ஒத்து போகிறதா?

புதிய மலேசியாவில் புதியது என்ன? இது யோசிக்க வேண்டிய விஷயம் மட்டுமல்ல, தற்போது விவாதிக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கிறது. புதிய மலேசியா ஆட்சிக்கு வந்து, 500 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், 100 நாட்களில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் எனப் பக்காத்தான் ஹராப்பான் கொடுத்த வாக்குறுதியில் நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன? என்பது குறித்த விவாதமானது மிக அவசியம் என்றேத் தோன்றுகிறது.

கருத்துக்களத்தில் புதிய மலேசியாவில் புதியது என்ன? என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு 4 பிரிவுகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று தலைப்புக்கள் கொடுக்கப்பட்டன. மொத்தம் 12 தலைப்புக்களில் 12 பேச்சாளர்களை இந்தக் கருத்துக்களத்திற்கு பி.எஸ்.எம். ஏற்பாடு செய்திருந்ததோடு மிக சூடான விவாதத்திற்கும் அது வழி வகுத்திருந்தது.

முதல் அங்கத்தில்,2018 தேர்தலுக்குப் பிறகு மலேசியாவில் புதியது என்ன?’ என்றத் தலைப்பில் கருத்துரையாடப்பட்டது.

“100 நாட்களில் நிறைவேற்றுவோம் எனப் பக்கத்தான் ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவரை 6 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த நினைக்கிறேன்; அதாவது கொடுத்திருக்கும் ஒவ்வொரு வாக்குறுதிகளின் கீழ் 44 கிளை வாக்குறுதிகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. தூய மலேசியாவுக்காக முன்னெடுத்த பெர்சே போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், புதிய மலேசியா வந்த பிறகு, அதில் திருப்தி அடைந்ததோடு, எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் கணிசமாக குறைந்தனர். தற்போது யார் பிரதமர் பதவியை நிர்ணயிக்க வேண்டும் என்ற அரசியல் உட்பூசலில் மக்கள் அதிருப்தியும் குழப்பமும் அடைந்துள்ளனர்,” எனப் பெர்சே 2.0 தலைவர், தாமஸ் ஃபாண் தெரிவித்தார்.

‘’புதிய மலேசியாவுக்கானப் போராட்டத்தில் ஊடகத்துறையின் பங்கு மிகப்பெரியது ஆகும். தற்போது ஊடகத்துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் பெரிதாக கவனிக்கப்படுகிறதா? ‘’உத்துசான் மலேசியா’’ போன்ற பத்திரிகைகள் மூடப்படும்போது பக்கத்தான் ஹரப்பான் (பி.எச்.) என்ன நடவடிக்கையை எடுத்தது? ஆட்சி கை மாறினாலும் ஊடகம் என்பது இன்னும்கூட அரசாங்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட கருவியாகவே உள்ளது,” என்றார் மலேசிய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் மலேசியகினி வலைப்பதிவாளருமான காயத்திரி வெங்கேடேஸ்வரன்.

இதே தலைப்பை ஒட்டி பேசிய, பி.எஸ்.எம். துணைத் தலைவர் அருட்செல்வன், “பாரிசான் அரசாங்கம் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்குக் கொடுத்து வந்த உதவி பணத்தின் சிலவற்றை நிறுத்திவிட்டது; சிலவற்றைக் குறைத்துவிட்டது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தன் காலையே சுட்டுக்கொண்ட நிகழ்வுகளாக ஐசெர்ட், ரோம் சட்டம், பறக்கும் வாகனம், சீபில்ட், சொஸ்மா மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய சம்பவங்கள் இருக்கின்றன. இந்த 6 விவகாரங்களும் நாட்டு மக்களிடையேப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, நடப்பு அரசாங்கத்தின் மீது ஒரு அதிருப்த்தியையும் ஏற்படுத்திவிட்டது,’’ என்றார்.

இரண்டாவது அரங்கம், ‘சமூகப்-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து பக்காத்தான் ஹராப்பான் தெரிந்து வைத்திருக்கிறதா? எனும் தலைப்பில் பேசப்பட்டது.

“டாக்டர் துன் மகாதீர் திரும்பி வந்துள்ளாரேத் தவிர, திருந்தி வரவில்லை. அதே இன அடிப்படையிலான கொள்கைகளையே மீண்டும் மீண்டும் ஆதரித்து வருகிறார்,” தேரென்ஸ் கொமெஸ், பொருளாதார துறை விரிவுரையாளர் கூறினார்.

மேலும், இதனால் பலனடைவது பணக்காரர்கள் என்றும், தேவை அடிப்படையிலான பொருளாதார கொள்கைகளே தற்போது நாட்டிற்குத் தேவை, இதன் மூலமே ஏழை மக்கள் பயனடைய முடியும், அதிலும் அதிகபட்ச மலாய்க்கார ஏழைகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“பி.எச். எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவர்கள் பல விஷயங்களுக்குக் குரல் கொடுத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, முன்னாள் அரசாங்கம் செய்த தவற்றையே இவர்களும் செய்கின்றனர்,” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“சுற்றுச் சூழலை நடுநிலையாக வைத்து, நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வரையறுக்க வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மேம்பட்டு திட்டங்களை தடுக்க முடியும். இப்போது உள்ள அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை,” என ‘மூன்றாம் உலக வலையமைப்பு’ (Third World Network) மீனா சொன்னார்.

இவர்களோடு, இரண்டாம் அரங்கில் இணைந்திருந்த, பி.எஸ்.எம். தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி நாட்டில் ஏழ்மையின் விகிதம் 0.4 விழுக்காடு எனக் கூறியது நம்ப முடியாத, அதிர்ச்சி தகவல் என்றார்.

“ஆனால், அது 15 விழுக்காடாக இருப்பது பின்னர் நிரூபணமாக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு பேங்க் நெகாரா அறிக்கையின் படி, ஒருவரின் சராசரி ஊதியம் 2,700 ரிங்கிட்டுக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது, கிடைக்கும் வருமானத்தில், தான் மற்றும் தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களை ஏழை அல்லது வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர் எனக் கூறப்படும் வேளையில், சமுதாயப் பார்வையில் தோல்வியடைந்த ஒருவராகத்தான் அவரைக் காண முடியும்,” என அவர் மேலும் விவரித்தார்.

கருத்துகளத்தின் மூன்றாம் அரங்கில், ‘இனம் மதம் – புதிய மலேசியாவில் இதன் நிலைப்பாடு என்ன?’ என்ற தலைப்பில் பேசப்பட்டது.

இந்த அரங்கில் கலந்துகொண்டு பேசிய, மலேசிய தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஷெரீபா முனிரா அலதாஸ், ‘ஜாகீம்’ போன்ற மத அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து, வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் இஸ்லாத்தின் முற்போக்கான தன்மையை ஊக்குவிப்பதில் எத்தனை அமைப்புகள் பங்களிக்கின்றன?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

“இனங்கள் ஒற்றுமையாக இருப்பதை எந்த அரசும் விரும்புவதில்லை. தொடக்கத்தில் இஸ்லாமியர் பொருள்களை வாங்கி ஆதரவு கொடுங்கள் என்ற பிரச்சாரம் தற்போது எந்த அளவுக்குத் தீவிரமடைந்துள்ளது என்பதை நாம் அறிவோம்,” என பி.எஸ்.எம். இளைஞர் பிரிவு தலைவர், நிக் அசிஸ் தெரிவித்தார்.

‘சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம்’ இயக்கத்தைச் சேர்ந்த மஜிடா ஹாசிம், “சத்தமில்லாமல் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று சிறார் திருமணம். 2020 நோக்கி நாடு போய்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இன்னும்கூட மின் வசதியில்லாத கிராமம் நமது நாட்டில் இருக்கிறது,” என்றார்.

மேலும், “பெண் பிள்ளைகளுக்கு மாதப் பிரச்சனை வந்தால், அதன்போது பயன்படுத்தக்கூடிய அடிப்படை பொருள்களை வாங்கி கொடுக்க வசதி இல்லாத குடும்பங்கள் இன்னமும் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக சிறார் திருமணத்தை ஆதரிக்கும் பெற்றோர்களும் நம்மிடையே உண்டு,” என்றார்.

‘அடுத்தது என்ன? – எப்படி முன்னோக்கி செல்லப்போகிறோம்?’ என்ற தலைப்பில் நான்காம் அரங்கம் அரங்கேறியது.

மக்களுக்காகப் புதிய அரசாங்கம் என நினைத்தால், நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கும் வேடிக்கை நடக்கிறது என விரிவுரையாளர் டாக்டர் தாஜூடீன் வருத்தம் தெரிவித்தார்.

“ஒரு சராசரி வாழ்க்கையை வாழும் இளைஞனின் பிரதிநிதியாக நான் பேசுகிறேன்,” என்ற மாணவர் உரிமை போராட்டவாதி, நிக் அஸுரா, “இந்த வாழ்க்கை எனக்குத் திருப்தியளிக்கவில்லை,” என்றார்.

“கல்வி முதற்கொண்டு, அடிப்படையாக கிடைக்க வேண்டிய அனைத்தும் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து இருக்கிறது. நாங்கள் குரல் மட்டும்தான் கொடுக்க முடியும். அதிகாரம் எங்களிடம் இல்லை,” என தனது தரப்பு கருத்தை முன்வைத்தார்.

“பழைய அச்சியில் வார்த்த புதிய அரசாங்கத்தைத்தான் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு முழுமையான மாற்றம் வர, மூன்றாவதாக ஒரு சக்தி தேவைப்படுகிறது. அது எது?” எனற கேள்வியோடு தனது பேச்சை தொடங்கிய பி.எஸ்.எம். பொருளாளர் சோ சொக் வா, “அது அரசியல் கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,” என்றார்.

“முழுமையான மாற்றத்தோடு, ஓர் அரசாங்கம் அமைய, பி.எஸ்.எம். எனும் ஒரு கட்சியால் மட்டும் முடியாது, அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை. மக்கள் பலத்தைக் கொண்டே அரசியல் மாற்றம் வர வேண்டும்; மேல்மட்டத்திலிருந்து (அதிகாரம் உள்ளிவர்களிடமிருந்து) கீழ் நோக்கி (அதிகாரமற்றவர்களுக்கு) வரக்கூடாது, அப்படி வந்தால் அது நிலைக்காது,” என அவர் மேலும் சொன்னார்.

கோலாலம்பூர் – சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் நடந்த இந்த கருத்துக்களம்  தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களைக் கொண்டு வழிநடத்தப்பட்டது. நாடு தழுவிய நிலையில் பல பார்வையாளர்களும் இடதுசாரி சிந்தனையாளர்களும் இதில் கலந்துகொண்டு, விவாதங்களில் ஈடுபட்டனர்.