பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர்: எதிர்ப்பாளர்கள் வெளியேறி புதுக்கட்சி அமைக்கலாம்

பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சி ஆண்டுக் கூட்டம் தொடர்பில் கட்சிக்குள் தவறான செய்திகளைப் பரப்பி “பேண்டுமென்றே உறுப்பினர்களைக் குழப்பிவருவோரை”ச் சாடினார்.

“கட்சியின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை மீறும் எண்ணம் கொண்டவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம். புதுக் கட்சி அமைத்துக் கொள்ளலாம்”, என சைட் பாட்லி ஷா ஓர் அறிக்கையில் கூறினார்.

பிகேஆர் இளைஞர் தேசிய காங்கிரசுக்கு ஒரே ஒரு தொடக்க விழாதான் உண்டு, அதற்கு பிகேஆர் ஆலோசனை மன்றத் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமை தாங்குகிறார் என்பதை அவர் வலியுறுத்தினார்.

“கட்சியின் மத்திய தலைமை மன்றம் செய்த முடிவுக்கு மாறாக நடத்தப்படும் நிகழ்வுகள் அதிகாரப்பூர்வ பிகேஆர் இளைஞர் பிரிவு நிகழ்வாகக் கருதப்படாது” என்று கூறியவர் “எல்லாத் தரப்பினரும் பிகேஆர் பெயரைச் சொல்லி மக்களைக் குழப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

பிகேஆரில் இளைஞர் பிரிவு காங்கிரசை யார் தொடக்கி வைப்பது என்ற விவகாரம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆதரவாளர்கள் அஸ்மின்தான் தொடக்கி விக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அஸ்மின் அலிக்கு அனுப்பப்பட்ட அழைப்பு மீட்டுக்கொள்ளப்பட்டு வான் அசிசா கூட்டத்தைத் தொடக்கிவைக்க அழைக்கப்பட்டிருப்பதாக பிகேஆர் இளைஞர் தலைவர் அறிக்கை வெளியிட்டதை அடுத்து சர்ச்சை மூண்டது.