அன்வார் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்படலாம்- காடிர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சிறப்புப் பணி அமைச்சராக நியமிக்கக் கூடும் என்கிறார் ஏ.காடிர் ஜாசின்.

தஞ்சோங் பியாய் படுதோல்வியை அடுத்து பிரதமர் அமைச்சரவையைத் திருத்தி அமைக்க உத்தேசித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த காடிர், அரசாங்கத்தில் அன்வாரின் பங்களிப்புப் பற்றி விவாதிப்பதற்கு இது சரியான நேரம்தான் என்றார்.

“அமைச்சரவை மாற்றம் மிகவும் தேவையான ஒன்று. ஹரப்பானின் தரமதிப்பீடு குறைந்துள்ளது மட்டும் அதற்குக் காரணமல்ல. அமைச்சர்கள் பலரது அடைவுநிலையும் திருப்திகரமாக இல்லை.

“அன்வார் தான் அமைச்சர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லையே என்று வேடிக்கையாகக் கூறி இருந்தாலும் பிரதமர் அவரைச் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கலாம்”, என்று காடிர் இன்று அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.