சுகாதார அமைச்சின் முன், அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல்

அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்களின் வேலை ஒப்பந்த பிரச்சனை இன்று புத்ராஜெயா சுகாதார அமைச்சகத்தின் முன்பு கொண்டு செல்லப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர்களாகப் பல ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படும் குத்தகை நிறுவனங்களால் வேலை சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதாவது, ஒவ்வொரு முறையும் அரசினரால் குத்தகைக்கு எடுக்கப்படும் புதிய நிறுவனங்கள், பல ஆண்டுகளாக வேலை செய்துவரும் தொழிலாளர்களைப் புதிய தொழிலாளர்களாக, வேலைக்குப் பாரம் பூர்த்தி செய்து நேர்காணல் வைத்து  வேலைக்கு எடுப்பதாகவும்; இதனால் சம்பள உயர்வு, போனஸ், வருடாந்திர விடுமுறைகள் அனைத்தையும் தொழிலாளர்கள் இழப்பதாகவும் தெரிவித்தனர்.

அதோடு மட்டுமின்றி, தற்போது அரசு சார்பில் குத்தகைக்கு வந்திருக்கும் நிறுவனமான UEMS, தொழிலார்களுக்கான யூனியன் வேண்டாம் என்று கூறுவதால், கலக்கம் அடைந்த தொழிலாளர்கள் இப்பிரச்சனையை வீதி போராட்டமாக தற்போது கொண்டு வந்திருக்கின்றனர்.

‘UEMS’ முழுமையான அரசாங்கத்திற்குச் சொந்தமான கசானா நேசனல் (Khazanah Nasional) நிறுவனமாகும். அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனமே தொழிற்சங்கத்தை முடக்குவது சரியா என மறியலில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பினர்.

இன்று காலை 11 மணியளவில், 100-க்கும் அதிகமான அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளியைச் சந்தித்து இப்பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்க சென்றனர்.

அமைச்சரை இன்று சந்திக்க முடியாது, அவருக்கு உடல் சுகமில்லை என அமைசர் தரப்பிலிருந்து தொடர்ந்து பதில் வந்துகொண்டிருந்தது. துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் ஒருவரிடம் மட்டுமே எங்களின் கோரிக்கையை நாங்கள் சமர்ப்பிப்போம் என்று உறுதியாக பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து, சுகாதார அமைச்சர் ஜுல்கிப்ளி, சில மணி நேரத்தில் மக்களைச் சந்தித்தது மகஜரைப் பெற்றுக்கொண்டதுடன், இதன் தொடர்பாக விரைவில் ஒரு பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார்.

1990-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, அரசு ஊழியர்களாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள், அதன்பிறகு அப்பணி தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவாக, அந்நியப்படுத்தப்பட்டனர். அன்றிலிருந்து பல பிரச்சனைகளை இந்தத் தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

இப்போராட்த்தினை ‘அரசாங்க மருத்துவமனை துப்புரவு பணி தொழிலாளர்களின் தொழிற்சங்கம்’ முன்னெடுத்து என்பது குறிப்பிடத்தக்கது.