வேதமூர்த்தி தாஜுடினை மன்னிக்கலாம், இந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்- பி. இராமசாமி

ஜெலுத்தோங் எம்பி ஆர்.எஸ்.என். ராயரை நெற்றில் இட்டிருப்பது சின் பெங்கின் அஸ்தியா என்று கேட்டு அசிங்கப்படுத்திய பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹமானை மன்னித்துவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கச் சொல்கிறார் செனட்டர் வேதமூர்த்தி .

வேதமூர்த்தி வேண்டுமானால் மன்னித்து மறக்கலாம் ஆனால் மலேசிய இந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்கிறார் பினாங்கு இரண்டாம் துணை அமைச்சர் பி.இராமசாமி.

தாஜுடின் இழிவுபடுத்தியது ராயரை மட்டமன்று, மலேசியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்து சமூகத்தையுமே அவர் இழிவுபடுத்தியுள்ளார் என்றாரவர்.

பிறகு , தாஜுடின் சொன்ன வார்த்தையை மீட்டுக்கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் அரைமனத்துடனேயே அவ்வாறு செய்தார்

அவரை ஒன்றிரண்டு நாள்கள் மட்டும் அவையினின்றும் நீக்கி வைப்பது போதாது, நிரந்தரமாகவே நீக்கி வைக்க வேண்டும் என்றார் இராமசாமி.

தாஜுடினுக்கு எதிராக பத்துக்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதால் போலீஸ் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் அவர்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.