பிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த’டால்’எரிமலை

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 24 எரிமலைகளில்’ டால்’ எரிமலை தான் இரண்டாவது மிகப் பெரியது . தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் உள்ள இந்த எரிமலை மிகப்பெரிய ஏரிக்கு நடுவே உள்ளது.ஏற்கனவே இந்த எரிமலை வெடித்து சிதறியதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர்.

இந்நிலையில், மீண்டும் வெடித்து சிதறியது. அப்போது 1 கி.மீ உயரத்திற்கு மேல் சாம்பல் புகை வெளியேறி வருகிறது.இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எரிமலை வெடித்ததையடுத்து மலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். எரிமலை வெடித்து சிதறி புகையை வெளியேற்றுவதை சிலர் மொபைலில் படம் பிடித்தனர்.

இது தொடர்பாக வல்லுனர்கள், டால் எரிமலை வெடிப்பால் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிமலை வெடிப்பால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மணிலா விமான ஓடுதளம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 170 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.