Op Selamat – 8 நாட்களில் 122 இறப்புகள்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து காவல்துறையினரால் தொடங்கப்பட்ட சாலை பாதுகாப்பு நடவடிக்கையான ‘ஒப் செலாமாட்’ / ‘Op Selamat’-ன் எட்டாவது நாட்களுக்குப் பிறகு 113 அபாயகரமான சாலை விபத்துக்களில் மொத்தம் 122 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (ஜேஎஸ்பிடி) இயக்குனர் அஜிஸ்மான் அலியாஸ் கூறுகையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கை பயணிகள் தான் அதிக எண்ணிக்கையில் (82 பேர்) இறந்துள்ளனர் என தெரிவித்தார்.

82 பேரில், சிலாங்கூரில் அதிகமான இறப்பு எண்ணிக்கையும் (23 இறப்புகள்), அதனை தொடர்ந்து, ஜொகூர், சரவாக், கெடா மற்றும் கிளந்தான் ஆகியவையும் பதிவாகியுள்ளன.

இதே காலகட்டத்தில் மொத்தம் 12,948 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன, சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான 3,870 சாலை விபத்துக்களை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், மொத்தம் 205,414 சம்மன்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 128,539 (62.6 சதவீதம்) ஆறு முக்கிய குற்றங்களை உள்ளடக்கியது, அதாவது, வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்துதல், போக்குவரத்து விளக்குகளை மீறுதல், வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுதல், அவசர பாதைகளை தவறாக பயன்படுத்துதல், வரிசைகளை முந்திச்செல்லல் மற்றும் இரட்டை கோடுகளில் முந்துதல் போன்ற குற்றங்களை உள்ளடங்கியுள்ளன.

பிப்ரவரி 1-ஆம் தேதியோடு’ஒப் செலாமாட்’ / ‘Op Selamat’ செயல்பாடு முடிவடையும்.