டெல்லி சட்டமன்ற தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

புதுடெல்லி, டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டது. 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் 11-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 6-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டின.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. மும்முனை போட்டியில் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் கடுமையாக பேரணிகள், பிரசாரங்களை மேற்கொண்டன.

இதனை தொடர்ந்து கடந்த 8ந்தேதி காலை 8 மணிக்கு டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு அமைதியுடன் நடைபெற்று முடிந்தது.

இவற்றில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து  ஜனநாயக கடமையாற்றினார்.  இதேபோன்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து சென்றார்.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு தொகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர்களின் மகன் ரைஹான் ராஜீவ் வதேரா ஆகியோர் வாக்களித்தனர்.  இதில் ரைஹான் முதன்முறையாக தனது வாக்கினை செலுத்தினார்.  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வாக்களித்து சென்றார்.  இதேபோன்று சஞ்சார் பவன் பகுதியில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் காரத் வாக்களித்து சென்றார்.

தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரு தரப்பிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என அக்கட்சியினரும் கூறினர்.  இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகளை எண்ணி வருகின்றனர்.  இவற்றில் ஆம் ஆத்மி 18, பா.ஜ.க. 6 என முன்னிலையில் உள்ளன.