PAS-இன் ‘நம்பிக்கை வாக்கு’ திட்டத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் – அன்வார்

டாக்டர் மகாதிர் முகமது பிரதமராக நீடிப்பதற்கு, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் பாஸ் திட்டத்தை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது எந்தவொரு அரசாங்கத்திலும் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதற்கு முன் செய்யாத ஒன்று என்று கூறிய அன்வார், இந்த பிரச்சினை பக்காத்தான் ஹராப்பன் தலைவர்களின் கலந்துரையாடலுக்கும் தகுதியற்றது என்று கூறினார்.

“இது பாஸ் கட்சிக்கு இயல்பான ஒன்றாகும். அவர்களின் நோக்கத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஹராப்பனை உடைப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே. அவை தோல்வியடையும். அவர்கள் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். இது அவர்களின் உத்தி. நாங்கள் ஏமாற மாட்டோம்,” என்று அவர் இங்குள்ள யயாசன் அண்டா அகாடெமிக்/Yayasan Anda Akademik (YAA) முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.

YAA, 1971 இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் பள்ளியாகும். அன்வார் இதன் நிறுவனர், இயக்குனர் மற்றும் முன்னாள் ஆசிரியராவார். தனது வாழ்க்கை அனுபவத்தை பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வு முழுவதும் ‘செகு அன்வார்’ என்று அழைக்கப்பட்ட அன்வார், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் 1971 முதல் 1974 வரை பொதுகல்வி, ஆங்கிலம் மற்றும் இஸ்லாமிய கல்வி பாடங்களைக் கற்பித்திருக்கிறார். 1976-ல் அவர் விடுதலையானதும் மீண்டும் தனது ஆசிரியப்பணியை தொடங்கி அரசியலில் சேரும் வரை கற்பித்தார்.

  • பெர்னாமா