கோவிட்-19: மலேசிய மாணவர் வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்

சீனப்புத்தாண்டை கொண்டாடிவிட்டு மலேசியாவிலிருந்து சமீபத்தில் ஆஸ்திரேலியா திரும்பிய ஒரு மலேசிய மாணவர் பெர்த்தில் உள்ள அவரது வாடகை வீட்டிலிருந்து எதிர்பாரா விதமாக வெளியேற்றப்பட்டார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவரை வெளியேற்றியுள்ளனர்.

பெயரிடப்படாத அந்த மாணவர் தனது வாடகை வீட்டுக்காரரின் செயலால் குழப்பமடைந்துள்ளார். அவர் கொரோனா கிருமியால் 1,300க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கண்ட சீனாவுக்கு அருகில் எங்கும் செல்லவில்லை என்று புலம்பியுள்ளார்.

அவர் சீனாவுக்குச் செல்லவில்லை என்ற போதிலும், சீன வம்சாவளியைச் சேர்ந்த அம்மாணவர் அதிகாலை 4 மணியளவில் தனது குடியிருப்பின் வெளியே பூட்டப்பட்டதாகக் கூறினார்.

ஜனவரி 24 ஆம் தேதி மலேசியாவுக்குச் வந்து, பிப்ரவரி 4 ஆம் தேதி அதிகாலையில் பெர்த்தில் உள்ள தனது வாடகைவீட்டிற்கு சென்றுள்ள அவர், சாவி மாற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

கூடுதலாக, “எச்சரிக்கை – உள்ளே வரக்கூடாது,” கொரோனா வைரஸை அடுத்து வீடு பூட்டப்பட்டது” என்ற ஒரு அறிவிப்பும் அங்கே ஒட்டபட்டிருந்தது. அவரது உடமைகளும் வீட்டிற்கு வெளியே போடப்பட்டன.

தனது விடுமுறையில் வீட்டுக்காரர் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது, ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபிறகுதான் அவருக்கு அந்த குறுஞ்செய்தி வந்துள்ளது.

தனது பெயரை வெளியிடாத மலேசிய மாணவர், இது குறித்து தான் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்ததாக கூறினார்.

பின்னர் அவர் காவல்துறைக்குச் சென்றுள்ளார். ஆனால் வீட்டு உரிமையாளருடன் முறையான வீட்டு வாடகை ஒப்பந்தம் இல்லாததால் அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அவர் இப்போது ஒரு நண்பரின் வீட்டில் தங்கி உள்ளார்.