கொரோனா விவகாரம்; மட்டு.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொரொனா பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை, தடுத்து வைத்து அவதானிக்கும் வகையிலும் ஆரம்ப சிகிச்சைக்காகவும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அழைத்து வரப்படுவதைத் தடை செய்யக் கோரும்  கண்டனத் தீர்மானமும் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்துவதற்குமான தீர்மானமும், மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 31ஆவது சபை அமர்வு,  மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.

இந்த அமர்வில், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகளுடன் முன்மொழிவுகளும், மாதாந்த வரவு-செலவு அறிக்கை தொடர்பான விடயங்களும், மாதாந்தக் கொடுப்பனவு  உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அங்குக் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்துவதற்குமான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், மாநகர நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மீள ஆரம்பிக்கப்படும் என்றும், அதனை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

வா.கிருஸ்ணா

tamilmirror.lk