நடமாட்டக் கட்டுப்பாட்டை குடிமக்கள் கடமையாக கருத வேண்டும் – சேவியர் ஜெயகுமார்

மலேசியாவில் அவசர-அவசரமாக மேற்கொள்ளப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு பற்பல வகைகளில் மக்களுக்கு அசௌகரியத்தை வழங்கினாலும், இந்த இக்கட்டான நேரத்தில் மலேசிய மக்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தப் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றுக் கூறினார்  கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர்  ஜெயகுமார்.

உலகம் கொரோன வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டு, அதன் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றவும், நோய் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் பல திட்டங்களைத் தீட்டி  அமல்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஆட்சி கவிழ்ப்பை நிகழ்ந்தது. ஆனால், இப்போது மக்களும் நாடும் தான் முக்கியம். எனவே நாம் அனைவரும் முழுமூச்சாக செயல்பட வேண்டும்.

சீனாவில் கொரோனா வைரஸ் பீடிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து சுமார் 2 மாதங்கள் பல்வேறு வகையான போராட்டங்களின் வழி அந்நோய் பீடிப்பை 25 நோயாளிகள் என்ற கட்டுப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான்  அரசு வைத்திருந்ததை அனைவரும்  அறிவர். ஆனால்  அந்த எண்ணிக்கை 900ஐ எட்டியுள்ளது. 

அதே வேளையில் இந்தத் தொற்று நோயைக் குறிப்பிட்ட வட்டத்துக்குள் கட்டுப்படுத்தி நாடு தழுவிய அளவில் பரவாமல் இருக்க அரசாங்கம் முறையான கட்டுப்பாட்டு விதிகளையும், வழிகாட்டிகளையும் மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும்  முன் கூட்டியே விளக்கமளித்து இருக்க வேண்டும்.

ஒரு பொறுப்பற்ற பொது நடமாட்டக் கட்டுப்பாடு என்ற அறிவிப்புடன் கூடிய ஓய்வை, நீண்ட விடுமுறையாகக் கருதிக் கொரோனா நச்சுநுண்மி தொற்றிய ஒருவர் தான் வசித்த இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் அந்த நச்சுநுண்மியை கொண்டு செல்ல அரசாங்கமே வழி வகுத்து விட்டது போன்ற நடவடிக்கை ஆபத்தானது.

நாடு அதிலிருந்து விடு பட வேண்டும் என்று வேண்டுவோம், அனைவரும் கண்டிப்பாக அவரவர் வீடுகளில் இருப்பதை அனைவரும் உறுதிப்படுத்துவோம். இதை நம் நாட்டுக்கு நாம் செய்யும் ஒரு கடமையாக கருத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.