கொரோனா வைரஸ்: 11,397 மரணங்கள் – சர்வதேச அளவில் நடப்பது என்ன?

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,139ஆக உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் இரானும், ஸ்பெயினும் உள்ளன. இரானில் 1,433 பேரும், ஸ்பெயினில் 1,093 பேரும் பலியாகி உள்ளனர்.

இப்படியான சூழலில் இளைஞர்களை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகமான ஜெனிவாவிலிருந்து இணையம் மூலமாக உரையாற்றிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ், “இளைஞர்களே உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல. உங்களையும் இந்த வைரஸ் வாரக்கணக்காக மருத்துவமனையில் இருக்க வைக்கலாம் அல்லது நீங்கள் மரணிக்கக் காரணமாக அமையலாம். கவனமாக இருங்கள். வயதானவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிருங்கள்,” என்றார்.

சர்வதேச அளவில் வயதானவர்கள்தான் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக அதிகளவில் பலியாகி இருக்கின்றனர்.

இத்தாலியில் வைரஸ் தொற்று காரணமாகப் பலியானவர்களின் சராசரி வயது 78.5.

சீனாவில் பலியானவர்களில் 1 சதவீதம் பேர்தான் 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். இறந்தவர்களில் 15 சதவீதம் பேர் 80 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்.

சரி. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் நடந்த தகவல்களை பார்ப்போம்.

 ஐக்கிய ராஜ்ஜியம்: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தேநீர் விடுதிகள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் எனப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

 அமெரிக்கா: கனடா மற்றும் மெக்சிகோ உடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா. சனிக்கிழமை இரவு முதல் அந்த பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படும். ஆனால், அதே நேரம் வணிக தேவைகளுக்கான போக்குவரத்து வழக்கம் போல இயங்கும்.

 கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் 230 பேர் பலியாகி உள்ளனர். 18,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ஸ்பெயின்: தேவையில்லாமல் அல்லது காரணமில்லாமல் வீதியில் நடமாடுபவர்களை ராணுவம் கைது செய்யும் என ஸ்பெயின் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

 இந்தோனீஷியா: இந்தோனீஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஊரடங்கு உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 இத்தாலியில் இராணுவம் ரோந்து செல்லத் தொடங்கியது. இயல்நிலை முடக்க உத்தரவுக்கு மக்கள் கீழ்ப்படிவதை உறுதி செய்வதற்காக இராணுவம் இத்தாலியின் தெருக்களில் ரோந்து செல்லத் தொடங்கும். இத்தாலியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் கொண்டுள்ளன. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அதிகமான நோயாளிகளைக் கையாள முடியவில்லை. இந்த வார தொடக்கத்தில், பெர்கமோ நகரில் – அதிகரித்து வரும் இறப்புகளின் காரணமாக, சடலங்களை புதைக்க அதிகாரிகள் மற்றும் தேவாலயங்களுக்கு போதுமான இடம் இல்லை.

சர்வதேச அளவில் நிலைமை இவ்வாறாக இருக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 88,210 பேர் குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
-bbc.tamil