சாலைத் தடைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் – ஐ.ஜி.பி.

சமூக ஊடகங்களில் காவல்துறையினரைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலையோரத் தடைகளை நிர்வகிக்கும் காவல்துறையினரின் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.

இது பொறுப்பற்ற நடவடிக்கை என்றும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறுவதாகவும் அவர் கூறினார்.

“”நடமாட்டத்தைத் தடுத்து, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதற்காகவும் வெறும் வேடிக்கைக்காகவும் போலிஸ் சாலைத் தடைகள் நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்”.

“மக்களைக் காப்பாற்றுவதற்காக கோவிட்-19 தொற்று சங்கிலியை உடைக்கும் நோக்கத்துடன் அவர்கள் ஒரு உன்னதமான பணியை மேற்கொண்டு வருகின்றனர்” என்று அவர் புக்கிட் அமானில் பெர்னாமாவிடம் கூறினார்.

சாலைத் தடைகளில் உள்ள காவல்துறையினர், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் என்பதை அப்துல் ஹமீத் தெரிவித்தார்.