ஹாடியின் கடிதம்: ‘அவதூறுகளுக்கு முன் உண்மைகளை சரிபாருங்கள்’ அன்வார் அறிவுறுத்துகிறார்

போர்ட் டிக்சன் எம்.பி.யை ஃப்ரீமேசன் (Freemason) இயக்கத்துடன் இணைத்த அப்துல் ஹாடி அவாங்கின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த பின்னர், பாஸ் தலைவர் பெற்ற தகவல்கள் பொய்யானவை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நேற்று இரவு தனது பேஸ்புக் பதிவில், அன்வார், “சிவில் சர்வீஸ் லாட்ஜ் எண் .143” என்ற தளத்தைக் காட்டி, அதில் “w.bro அன்வார் இப்ராஹிம்” என்ற அதே பெயரில் பணியாளர் உள்ளதை எடுத்துரைத்தார்.

2006ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அப்படத்தில், மூன்று நண்பர்களுடன் கருப்பு சூட் அணிந்த, w.bro அன்வார் இப்ராஹிம் என்ற ஒரு பருத்த ஆண் இருந்தார்.

“ஹாடி, அந்நபர் நான் தான் என்று கூறுகிறார். அந்த பருத்த நபர் ஒரு ஃப்ரீமேசன் உறுப்பினரும் கூட”.

“எனவே நானும் ஆச்சரியப்படுகிறேன். சாதாரண மக்கள் பிரச்சாரங்களின் போது ஒழுக்கங்களைப் பற்றி பேசுவது, மதம் இல்லை என்று கூறுவது என்பது எல்லாம் வேறு. ஆகையால், அந்த ‘அன்வாரின்’ பெயரைக் கண்டுபிடிக்க என் ஊழியர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் இந்த ‘அன்வாரின்’ பெயரைக் கண்டுபிடித்தோம்.

“இது அவர்களுக்கு என்னைத் தாக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

தன் மீது கடுமையான அவதூறு பரப்பிய ஹாடியின் கடிதம் பற்றி பதிலளித்தபோது அன்வார் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, அரபு மொழியில் எழுதப்பட்ட “அமைதியான இஸ்லா போராட்டம், அதிகார பறிப்பும் அல்ல, புரட்சியாலும் கைப்பற்றவில்லை” என்ற தலைப்பில் மார்ச் 22 தேதியிட்ட ஹாடியின் கடிதம் ஏப்ரல் 4 முதல் சமூக ஊடகங்களில் காணப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்களுக்கு ஹாடி எழுதியதாகக் கூறப்படும் அக்கடிதம், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளதற்காகவும், அன்வரை இழிவுபடுத்தியுள்ளதற்காகவும் பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

அவதூறு பரப்புவதற்கு முன் பிரதமரின் மத்திய கிழக்கு சிறப்பு தூதரான ஹாடி, உண்மைகளை முதலில் ஆராய வேண்டும் என்று அன்வார் அறிவுரைத்தார்.

“கடவுளே. இவர்களின் அரசியல் விளையாட்டு எனக்கு புரிகிறது, அம்னோவை ஆதரிப்பதும் தெரிகிறது. ஆனால், 2006ல் நான் இவ்வளவு பருமனாக இருந்தது இல்லை”, என்று அவர் சிரிப்புடன் கூறினார்.

“நீங்கள் ஒரு குற்றச்சாட்டை கூற விரும்பினால், முதலில் உண்மைகளை ஆராய்ந்து, சரிபார்க்கவும்”.

இதனால், தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க, ஹாடியின் குற்றச்சாட்டு கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்லாமிய உலகத் தலைவர்களுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்புவதாக அன்வார் கூறினார்.

“ஹஜ் ஹாடி அவாங்கின் கடிதத்தைப் பெற்ற இஸ்லாமிய உலகின் தலைவர்களுக்கு நான் பதில் அளித்து அறிவிப்பேன். அவதூறாக எழுதப்பட்ட இந்த கடிதத்தை பொதுமக்களுக்கும் விநியோகிப்பேன்”.

“இஸ்லாத்தில், நாம் தலைவருக்குக் கீழ்ப்படியலாம். ஆனால் நாம் எதையும் சிந்திக்க முடியாத, மதிப்பிட முடியாத, ஒரு தலையாட்டி பொம்மையாக இருக்கக்கூடாது. நமது அரசியல் எதிரிகளை அவதூறாகப் பழித்தும் பேசக் கூடாது,” என்று அவர் கூறினார்.