மது விற்பனையில் தென் மாநிலங்கள் முன்னிலை: தமிழகம் முதலிடம்

புதுடில்லி: நாட்டில், மது விற்பனையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவின் மது விற்பனையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு, 45 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதாவது, நாடு முழுதும் மது குடிப்பதில், சரி பாதி பங்கை, இந்த ஐந்து மாநிலங்கள் பெற்றுள்ளன.

மது விற்பனையில், நாட்டிலேயே தமிழகம், 13 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, 12 சதவீதத்துடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகியவை, முறையே, 7, 6, 5 சதவீதத்துடன் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன

தென் மாநிலங்களில், மது விற்பனை வாயிலான வரி வருவாயில், தமிழகம், கேரளா ஆகியவை தலா, 15 சதவீத பங்குடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. கேரளாவில், 3.30 கோடி மக்கள் தான் உள்ளனர். ஆனால், அங்கு, மதுவுக்கு வரி விதிப்பு அதிகம் என்பதால், விற்பனை குறைவாக உள்ள போதிலும், வருவாய் அதிகமாக உள்ளது.

மது விற்பனையில், டில்லி அரசுக்கு, 12 சதவீத வருவாய் கிடைக்கிறது. ஆனால், தேசிய அளவிலான மது விற்பனையில், இதன் பங்கு, 4 சதவீத அளவிற்கே உள்ளது. கர்நாடகா, ஆந்திரா ஆகியவை தலா, 11 சதவீதமும்; தெலுங்கானா, 10 சதவீத வருவாயும் பெறுகின்றன.

இந்தியாவில், மது விற்பனையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களுடன், டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய, 12 மாநிலங்களின் பங்கு, 75 சதவீதமாக உள்ளது. இம்மாநிலங்கள், ஊரடங்கு காரணமாக, மது விற்பனை வாயிலான வருவாயை இழந்துள்ளன.

அதே நேரத்தில், தற்போதைய சூழலில், மதுக் கடைகளை திறப்பதிலும் ஆபத்து உள்ளது. ஏனெனில், இந்தியாவில், கொரோனா பாதிப்பில், இந்த, 12 மாநிலங்களின் பங்கு, 85 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மஹாராஷ்டிராவில் மட்டும், 31.2 சதவீதம் பேர் உள்ளனர். டில்லி, தமிழகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே, 10, 7.6, 7, 5.9 சதவீதம் பேர் உள்ளனர். கேரளாவில் மட்டும், பாதிப்பு மிகச் சொற்பமாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar