“சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை இன்று வட்டத்துக்குள்” – வைரலாகும் வைரமுத்துவின் கொரோனா கவிதை

வைரமுத்து

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து கொரோனா பற்றி வெளியிட்டுள்ள கவிதையில் கூறியிருப்பதாவது: “ஞாலமளந்த ஞானிகளும் சொல்பழுத்த கவிகளும் சொல்லி கேட்கவில்லை நீங்கள். கொரோனா சொன்னதும் குத்தவைத்து கேட்கிறீர்கள். உலக சுவாசத்தை கவ்விப்பிடிக்கும் இந்த தொண்டைக்குழி நண்டுக்கு நுரையீரல்தான் நொறுக்குத்தீனி. இந்த தட்டுக்கெட்ட கிருமியின் மொத்த எடையே ஒன்றரை கிராம்தான்.

சாலைகள் போயின வெறிச்சோடி போக்குவரத்து நெரிசல் மூச்சுக்குழாய்களில். தூணிலுமிருப்பது துரும்பிலுமிருப்பது கடவுளா? கொரோனாவா? இந்த சர்வதேச சர்வாதிகாரியை வைவதா? வாழ்த்துவதா? தார்ச்சாலையில் கொட்டிக்கிடந்த நெல்லிக்காய் மனிதர்கள் இன்று நேர்கோட்டு வரிசையில். சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை இன்று வட்டத்துக்குள். உண்ட பிறகும் கை கழுவாத பலர் இன்று உண்ணு முன்னே. புகைக்குள் புதைக்கப்பட்ட இமயமலை இன்றுதான் முக கவசம் களைந்து முகம் காட்டுகிறது.

மாதமெல்லாம் சூதகமான கங்கை மங்கை அழுக்கு தீரக் குளித்து அலைக்கூந்தல் உலர்த்தி நுரைப்பூக்கள் சூடி கண்சிமிட்டுகின்றாள் கண்ணாடி ஆடைகட்டி. குஜராத்தி கிழவனின் அகிம்சைக்கு மூடாத மதுக்கதவு கொரோனாவின் வன்முறைக்கு மூடிவிட்டதே! ஆனாலும் அடித்தட்டு மக்களின் அடிவயிற்றிலடிப்பதால் இது முதலாளித்துவக் கிருமி.

மனித மூளையின் திறக்காத பக்கத்திலிருந்து கொரோனாவைக் கொல்லும் அமுதம் கொட்டப் போகிறது. ஆனால், இயற்கை சொடுக்கிய எச்சரிக்கை மறவாது ஏ சர்வதேச சமூகமே! ஆண்டுக்கு ஒரு திங்கள் ஊரடங்கு அனுசரி. கதவடைப்பை கட்டாயமாக்கு. துவைத்துக் காயட்டும் ஆகாயம். கழியட்டும் காற்றின் கருங்கறை. குளித்து முடிக்கட்டும் மானுடம் முதுகழுக்கு மட்டுமல்ல மூளையழுக்குத் தீரவும்”.

இவ்வாறு கூறியுள்ளார்.

malaimalar