மற்ற நாடுகளை விட கொரோனா பாதிப்பு குறைவு – இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்காக, இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி, ஆன்லைன் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில், மத்திய சுகாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனருமான சவும்யா சுவாமிநாதன் பேசியதாவது:-

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதற்காக, மத்திய சுகாதார மந்திரிக்கும், அவருடைய சகாக்களுக்கும் நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் ஓடிக்கொண்டிருப்பது மாரத்தான் என்பது நமக்கு தெரியும். எனவே, இந்த கொரோனாவை எதிர்கொள்ள இனிவரும் மாதங்கள் மட்டுமின்றி, வருடக்கணக்கில் ஒட்டுமொத்த உலகமும் தயாராக வேண்டும்.

அதிக மக்கள்தொகை, மக்கள் நெரிசல் என்ற விதத்தில் இந்தியாவுக்கு நிறைய சவால்கள் இருக்கின்றன. நிறைய கிராமங்களில் மருத்துவ வசதி கிடைக்கவில்லை. எனவே, ஆரம்ப சுகாதாரத்தை வலுப்படுத்தி, சுகாதார கட்டமைப்புகளை உருவாக்க இதுவே தக்க தருணம்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசி கண்டறிவது மட்டும் போதுமானது அல்ல. தடுப்பூசியை உற்பத்தி செய்வதும், அதை கொள்முதல் செய்வதும், அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதும் முக்கியம்.

தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது.

பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். ‘எபோலா’ தடுப்பூசி 5 ஆண்டுகளிலேயே உருவாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியை ஓராண்டிலோ அல்லது அதை விட குறைந்த காலத்திலோ உருவாக்குவதுதான் நமது நோக்கம்.

தடுப்பூசியை உருவாக்குவதில் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குத்தான் முதலில் போட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

malaimalar