கொரோனா அச்சத்துக்கு மத்தியில் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

செயற்கைகோள்களுடன் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த காட்சி.

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் சீனா நேற்று 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பீஜிங்: சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதே சமயம் சீனாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இதனால் அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும் அந்த நாடு முழுமையாக கொரோனாவில் இருந்து மீண்டுவிடவில்லை. மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரமாகலாம் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.

இந்த நிலையில் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் சீனா நேற்று 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக இந்த செயற்கை கோள்களை சீனா அனுப்பி உள்ளது.

வடமேற்கு மாகாணம் கான்சுவில் உள்ள ஜியாகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து, ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய 2 செயற்கைகோள் குய்சோ-1ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த 2 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

malaimalar