டாக்டர் மகாதீருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை – பி.கே.ஆர்.

லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதிர் முகமது பிரதமராக வருவதற்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்றுள்ளது பி.கே.ஆர்.

இன்று ஒரு அறிக்கையில், கட்சி தகவல் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பட்ஸில், ஞாயிற்றுக்கிழமை பி.கே.ஆர் மத்திய தலைமைக் குழு கூட்டத்தில் இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

“நான் அக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். கூட்டத்தின் நிமிடங்களை மீண்டும் மதிப்பாய்வு செய்து பார்த்தேன். மேலும் இந்த விடயம் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை; முடிவு செய்யப்படவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, சின் செவ் வெளியிட்ட செய்தி தவறானது.”

“ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் கட்சியின் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் மே 18 நாடாளுமன்ற கூட்டத்திற்கான தயார்நிலை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஒரு சீன நாளிதழ் ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, மே 17 அன்று நடந்த கூட்டத்தில் மகாதீருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற பி.கே.ஆர் மத்திய தலைமைக் குழு முடிவு செய்துள்ளது என செய்தியை வெளியிட்டது.

மகாதீருடனான தனது உறவு குறித்து அன்வார் அக்கூட்டத்தில் கூறியதாகவும், பிரதமர் வேட்பாளராக மகாதீருக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற பரிந்துரைத்ததாகவும் அந்த வட்டாரம் கூறியது.

“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அன்வார் உள்ளிட்ட பி.கே.ஆர் தலைவர்கள் இனி மகாதீர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். பி.கே.ஆர் மகாதீருடன் தொடர்ந்து பணி உறவுகளைப் பேணும், ஆனால் இனி அவரை பிரதமராக ஆதரிக்காது” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.