அமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்

அமெரிக்காவில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி

அமெரிக்காவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. 16.2 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்றாலும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் மருத்துவத் துறை திணறி வருகிறது.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

‘கொரோனா வைரசால் உயிரிழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களில் அனைத்து மத்திய அரசு அலுவலக கட்டிடங்கள், தேசிய நினைவுச் சின்னங்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி உத்தரவிட்டுள்ளேன். மேலும் நாட்டிற்கு சேவை செய்து உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவு நாளையொட்டி அவர்களை கவுரவிக்கும் வகையில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்’ என டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை எட்ட உள்ள இந்த துயரமான நாளில், அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar