மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா?

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா? – ஜி.கே கணேசன் – ஒரு வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியும் ஆவார்.

[1]. வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் வரலாறு (Westminster system)

மலேசிய அரசியலமைப்பு முடியாட்சியும் நமது நாடாளுமன்ற அமைப்பும் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை.

உலகெங்கிலும் உள்ள ஜனநாயகங்களின் அடித்தளம் ஒரு முக்கிய கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது: அதுவே ‘சட்ட ஆட்சி’ (‘Rule of Law’).

ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரம் முற்றிலும் மக்களின் கைகளில் உள்ளது. ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதால், அவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த பிரதிநிதிகள், பிரதிநிதிகள் சபையில் அமர்ந்திருக்கிறார்கள். மலேசியாவில், இது திவான் ராக்யாட் என்று அழைக்கப்படுகிறது. இதில் 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒரு நாட்டின் நிர்வாகம் மூன்று குழுக்களால் கையாளப்படுகிறது: –
i. நாடாளுமன்றம் (இது சட்டங்களை உருவாக்குகிறது),
ii. நீதித்துறை (இது சட்டங்களை விளக்குகிறது) மற்றும்
iii. தேசிய நிர்வாகத்தை இயக்கும் நிர்வாகிகள் – ஒரு பாதுகாவலர் போல.
இது ஒரு நுட்பமான முறையை உருவாக்குகிறது, அதிகாரங்களைப் பிரிப்பதை உறுதி செய்கிறது.
வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியில், மன்னர் பெயரளவில் நாட்டுத் தலைவராக பதவி வகிக்கிறார். இவரது தினப்படியான பணிகள் சடங்குசார் செயல்பாடுகளை நிகழ்த்துவதாக இருக்கும். அரச குடும்பம் அரசியலில் இருந்து முற்றிலும் விலகியிருக்கிறது.

[2]. நாடாளுமன்றத்தின் குரல்

நாடாளுமன்றத்தின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள அடித்தளக் கருத்து அதன் மூல வார்த்தையான ‘பார்லெ’ (‘Parlez’) என்பதாகும். பிரெஞ்சு மொழியில், இதற்கு ‘ஒரு பேச்சு’ என்று பொருள்.

எனவே, மக்கள் பேசும் இடம் நாடாளுமன்றம். அங்குதான் அவர்களின் குரல்கள் கேட்கப்படுகின்றன, அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் மக்களுக்கு ‘பார்லெ’.

நாடாளுமன்றத்தை அமைதியாக இருக்க செய்தால், மக்களின் குரல்களும் திணறுகின்றன.

[3]. நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் அடித்தளம்; அரசாங்கம் மக்களின் சேவகன்

பிரதிநிதிகள் சபையில் மக்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு, அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். வேறு வழியில்லை.
இந்த கருத்துக்களை நம் மனதில் உறுதியாக நிலைநிறுத்தி, இப்போது உடனடி விஷயங்களுக்கு திரும்புவோம்.

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா? இல்லை என்பதே பதில்.

இது ஜனநாயகத்தின் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு நாடு என்ற அடிப்படைக் கொள்கையுடன் நாம் தொடங்குவோம். அதாவது குடிமக்களாகிய நாம் நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். இந்த நாட்டின் 34 மில்லியன் மக்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து தேசத்தை பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க முடியாததால், நாடாளுமன்றத்தில் நம்மை பிரதிநிதித்துவப்படுத்த 222 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அவர்களில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அரசியலமைப்பு முறைப்படி, அவர் மாட்சிமைத் தங்கிய மாமன்னரை அணுகி, அவரின் ஒப்புதலைப் பெறுகிறார். அவர் மாமன்னரின் முன் சென்று, அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியலை அளிக்கிறார். அது மீண்டும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் அமைச்சரவையை அமைத்து அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்தின் ஊழியரே. அவர்கள் திரும்பி வந்து தாங்கள் செய்யும் அனைத்து வேலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும், அவர்கள் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

[4]. 28 பிப்ரவரி 2020 அன்று நடந்த நிகழ்வுகள் மார்ச் 1க்கு வழிவகுத்தன

மார்ச் 1 ஆம் தேதி, முகிதீன் யாசின் முகாம் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அரசாங்கத்தை கைப்பற்றியது. அந்த நாளில், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை முகிதீன் அனுபவித்ததில் திருப்தி அடைந்த மாமன்னர், அவரை எட்டாவது பிரதமராக நியமித்தார்.

[5]. முகிதீனின் அரசாங்கத்தின் வலிமை

முகிதீன் அரசாங்கம் 1.3.2020 அன்று அரசாங்கத்தின் தலைமையை ஏற்றுக்கொண்டது. ஆனால் 1.3.2020 முதல், முகிதீன் அரசாங்கத்தின் வலிமையும் அவரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாடாளுமன்றத்தில் ஒருபோதும் சோதிக்கப்படவே இல்லை.

அந்த சோதனை மார்ச் 9 அன்று நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருந்த போது நடைபெற திட்டமிடப்பட்டது.
ஆனால், அமர்வை மே 18க்கு ஒத்திவைக்குமாறு பிரதமர் முகிதீன் கேட்டுக்கொண்டார்.

[6]. வரமா, சாபமா?

பின்னர், கோவிட்-19 தொற்றுநோய் தோன்றி, அதன் பின்னர் அவருக்கான ஆதரவை சோதிக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்தது. கோவிட்-19 தொற்றுநோய் அவரது நிலையை பலப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பைக் கொடுத்தது. இதன் விளைவாக, முகிதீன் எதிர்க்கட்சியின் தரப்பிலிருந்து தொடுக்கப்பட்ட அம்புகளிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.

உண்மையில், கோவிட்-19 தொற்றுநோய் முகிதீனுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் தோன்றினாலும், அது அவருக்கு ஒரு ஆபத்தாகவும், தடையாகவும் மாறியது. ஏனெனில் அது முகிதீனின் சக்தியை பலப்படுத்த அவர் செய்யக்கூடிய காரியங்களை மட்டுப்படுத்தியது.
மேலும் அவர் தொற்றுநோயினால் ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க, அரசாங்கத்தின் பெரும் தொகை பணத்தையும் செலவிட்டார். அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. ஆனால், அவர் இந்த பணத்தை செலவழித்ததால், அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குச் சென்று அதன் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெற வேண்டும்.

[7]. நாடாளுமன்ற ஒப்புதல் தேவை

ஜனநாயகத்தின் ஒரு முக்கிய கொள்கை இதுதான்: மக்களுக்கு வரி விதிக்கவும், கருவூலத்தில் உள்ள நிதிகளின் செலவினங்களை வழங்குவதற்கும், அல்லது நிறுத்துவதற்குமான அதிகாரம் பிரதிநிதிகள் சபைக்கு மட்டுமே உள்ளது.

பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை, அத்தகைய செலவுகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியாவிட்டால், அன்றைய அரசாங்கத்திற்கு ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

அத்தகைய ஒப்புதல் விரைவாக பெறப்பட வேண்டும். இதற்கான கடைசி நாள் 18 ஜூன் 2020 ஆகும்.

[8]. நாடாளுமன்றம் 5 மாதங்கள் மற்றும் 29 நாட்களுக்கு மேல் இடைவெளியில் இருக்க முடியாது

நாடாளுமன்றத்தின் கடைசி அமர்வு 19 டிசம்பர் 2019 நடந்தது. பிரிவு 55 இன் கீழ், 6 மாத காலத்திற்குள் நாடாளுமன்றம் மீண்டும் அமர வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே அடுத்த அமர்வைக் கூட்டும் கடைசி தேதி 18 ஜூன் 2020 ஆகும். ஏற்கனவே 8 மார்ச் 2020 அன்று திட்டமிடப்பட்ட அமர்வு 18 மே 2020க்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மாமன்னரால் அறிவிக்கப்பட்ட கூட்டம் பிரதிநிதிகள் சபை தலைவராகக் கருதப்படும் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் ஒத்திவைக்கப்பட்டது.

[9]. நாடாளுமன்றக் கூட்டம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை பிரதமர் நிர்நயிக்க முடியாது

நாடாளுமன்றத்தில் செயல்முறைகள் அல்லது நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அது சபாநாயகரைப் பொறுத்தது; பிரதமரை சார்ந்தது அல்ல. சபாநாயகரின் அதிகாரங்களை பிரதமர் மீற முடியாது.
அவர் அப்படி செய்தால் – அது அதிகாரப் பிரிவினை கொள்கையை தெளிவாக மீறும்.

[10]. நாடாளுமன்றத்தில், யாருக்கு அதிக பதவி? பிரதமருக்கா அல்லது சபாநாயகருக்கா? ஏன்?

அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஊழியர், சேவகன்.

பிரதமர் ‘சபைத் தலைவர்’ என்பதால், அவர் சபாநாயகரை மீற முடியும் என்று அர்த்தமல்ல.

நாடாளுமன்றத்தில், சபாநாயகரின் நிலைப்பாடு முதன்மையானது – அவர் பிரதமரை விட உயர்ந்த அதிகாரங்களைப் பெறுகிறார். சபாநாயகர் சபையின் தலைமை அதிகாரியாக உள்ளார். அவரே நாடாளுமன்றத்தை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துகிறார்.
அவர் திவான் ரக்யாட்டின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார். விரிவான அதிகாரங்களைக் கொண்டுள்ளார்.

ஒழுங்கை தீர்மானிக்கிறார், நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கிறார், ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிப்பதற்கு பொறுப்பேற்கிறார், நிலையான ஆர்டர்கள் மற்றும் நடைமுறை விஷயங்களை விளக்குகிறார், வாக்குகள், நடவடிக்கைகள், மற்றும் மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார்; அவர் எந்த நேரத்திலும் நாடாளுமன்ற அமர்வை நிறுத்தியும் வைக்கலாம். அவருடைய முடிவே இறுதியானது. அது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம்.

[11]. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை தீர்மானிக்கும் சட்டத்தின் ஆதாரங்கள்

ஜனநாயகத்தில், அதிகார வரம்பு, அதிகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளை கட்டுப்படுத்தும் பல சட்ட ஆதாரங்கள் உள்ளன.

  1. முதலாவது, சட்டத்தின் கோட்பாடு (The rule of law)
  2. இரண்டாவது ஆதாரம், கூட்டாட்சி அரசியலமைப்பு (The Federal constitution)

– ஒரு தொடர்புடைய கொள்கை என்னவென்றால், மக்களின் குரல்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அமைதிபடுத்தப்படக்கூடாது.
நாடாளுமன்றத்தின் கடைசி அமர்வு 19 டிசம்பர் 2019 அன்று நடைபெற்றது. நாடாளுமன்றம் அதன் அடுத்த அமர்வை மீண்டும் கூட்டுவதற்கான கடைசி நாள் 18 ஜூன் 2020 ஆகும்.
3. மூன்றாவது ஆதாரம், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற மரபுகள் (Constitutional and parliamentary conventions)
– சட்டமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அவற்றின் நிலைத்தன்மை, பண்டைய அதிகாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் காரணமாக, அவை எந்தவொரு சாதாரண சட்டத்திற்கும் சமமான அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
4. நான்காவது ஆதாரம், பொதுவான சட்ட முன்னுதாரணங்கள் (The common-law precedents)
5. இறுதியாக, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள்/நிலையான ஆணைகள் (Standing order of dewan rakyat).
– நாடாளுமன்றம் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் பல விதிகளை உருவாக்கியுள்ளது. இவை, நாடாளுமன்றம் தனது விவகாரங்களை எவ்வாறு நடத்த விரும்புகிறது என்பதை தீர்மானிக்கும் நிலையான ஒழுங்கு முறைகள். எந்தவொரு வெளி அமைப்பும் நாடாளுமன்றத்தை அதன் நடவடிக்கைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று சொல்ல முடியாது.
உண்மை என்னவென்றால், சபாநாயகர் சபையின் எஜமானர். பிரதமர் அதன் தலைவர். ஆனால் இருவரும் நிலையியற் கட்டளைகளுக்கும் உயர் சட்டங்களுக்கும் இணங்க வேண்டும். அதாவது சட்டத்தின் கோட்பாடு மற்றும் அதிகாரப் பிரிவினைக் கொள்கைகளுக்கு உடன்பட வேண்டும். ஒரு நிலையான ஆணையில் இருந்து விலகல் தேவைப்படும்போது, சபாநாயகர் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

எந்தவொரு விதி அல்லது நிலையான ஆணை, கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ள கொள்கைகளுக்கோ அல்லது சட்டத்தின் கோட்பாடுகளுக்கோ முரணாக இருந்தால், விதிகள் நடைமுறைக்கு வர முடியாது. அவை தோல்வியடைகின்றன.

[12]. திவான் ராக்யாட்டின் நிலையியற் கட்டளைகளின் 14வது கட்டளையில் 18 படிகள் (Order 14 of the Standing Orders of the Dewan Rakyat)

நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் பணிகள் ‘வணிகம்’ (‘business’) என்று விவரிக்கப்படுகின்றன.

இது ஒரு அசாதாரண சொல்: இது ஒரு வரலாற்று அர்த்தத்தைக் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் மற்றும் மக்களின் நலனைக் கவனிப்பதையே அவர்களின் ஒரே ‘வணிகமாக’ கருதி வருகின்றனர்.
அந்த ‘வணிகம்’ 14வது கட்டளையில் பட்டியலிடப்பட்ட 18 ‘பரிவர்த்தனைகளை’ கொண்டுள்ளது.

இதுபோன்ற ‘வணிகம்’ மற்றும் ‘பரிவர்த்தனைகள்’ கட்டாயமாகும். மேலும் இந்த ‘பரிவர்த்தனைகளின்’ வரிசைமுறை கிட்டத்தட்ட வளைந்து கொடுக்காதது; மாற்ற முடியாதது. வணிகத்தின் ஒழுங்கை மாற்ற வேண்டுமானால் சபை அதற்கு வாக்களிக்க வேண்டும்.

இதை மாற்ற வேண்டுமானால் பிரதம மந்திரி நாடாளுமன்றத்திற்கு வந்து கட்டளையை மாற்றுமாறு கேட்க வேண்டும். வாக்களிப்பில் பிரதமருக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும். அப்படி அவருக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதை மாற்ற முடியாது, அவர் 14வது கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்.

[13]. அனைத்து உறுப்பினர்களும் 14வது கட்டளையை மாற்ற ஒப்புக் கொண்டால், மற்ற 17 படிகளைத் தவிர்த்துவிடலாமா?

அவர்களால் முடியும், ஆனால் அவர்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

அனைத்து 222 உறுப்பினர்களும் எழுந்து மாமன்னர் உரைக்குப் பிறகு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொண்டால் அது சரியாக இருக்குமா?

இல்லை: இதை நாம் பின்னர் விவாதிக்கலாம்.

[14]. சபாநாயகர் தன்னுடைய விருப்பப்படி 14வது கட்டளையில் வரிசைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை வெளியேற்றுவதற்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா?

14வது கட்டளை எழுதப்பட்ட விதத்தைப் பாருங்கள்:

“unless the house otherwise directs, the business of each sitting shall be transacted in the following order”

“சபை வேறுவிதமாக வழிநடத்தாவிட்டால், ஒவ்வொரு அமர்வின் வணிகமும் பின்வரும் வரிசையில் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும்…” [இதைத் தொடர்ந்து, 18 படிகள் கொடுக்கப்பட்டுள்ளன].

இந்த வார்த்தைகளுக்கு அதிக கவனம் செலுத்துங்கள்:

‘ஒவ்வொரு அமர்வின் வணிகமும் பின்வரும் வரிசையில் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும்’.

‘பின்வரும் வரிசையில்’ என்ற சொற்களுடன் ‘வேண்டும்’ என்று இணைக்கும்போது அது கட்டாயமானதாகவும் விலக்க முடியாத ஒன்றாகவும் உள்ளது என்றே பொருளாகிறது.

[15]. எந்த ‘ஒழுங்கில்’ நாடாளுமன்றத்தின் ‘வணிகம்’ ‘பரிவர்த்தனை’ செய்யப்பட வேண்டும்?

பிரதிநிதிகள் சபையின் நிலையியற் கட்டளையின் 14ஆவது கட்டளை (Order 14 of the Standing Order), நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது அதன் நடவடிக்கைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான கட்டளையை விதித்துள்ளது.
18 படிகளின் வரிசை முறையில் நடைபெற வேண்டும் என பட்டியளிடப்பட்டுள்ளன. அவை ஒன்றுக்கு அடுத்து மற்றொன்று என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கட்டளையின் வரிசைமுறை:

  1. முதலில், சபாநாயகர் பிரதிநிதியின் சபைக்குள் முறையாக நுழைவார்
  2. பின்னர், இறை வழிபாடு
  3. மூன்றாவதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன் பதவியேற்பு
  4. பரிவர்த்தனை செய்யப்பட வேண்டிய நான்காவது படி, மாட்சிமை தங்கிய மாமன்னரின் (நேரில் அல்லது ஒரு பிரதிநிதி மூலமாக) ‘செய்திகளை’ படிப்பது – அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல், எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்களை கோடிட்டுக்காட்டுகிறது
  5. மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசாங்க திட்டத்தை வகுத்தல்
  6. மன்னருக்கு ஒரு நன்றியுணர்வின் பின்னர், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் விவாதிக்கப்படும். அதன் பிறகு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் வாக்களிக்கப்படுகிறது. அந்த வாக்கெடுப்பு வெற்றிபெற தவறினால், அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும்.
  7. ‘வணிகம்’ ‘பரிவர்த்தனை’ செய்யப்படும்
    14ஆவது கட்டளையில் உள்ள சொற்கள் மிக முக்கியமானவை. அவை அறிவுறுத்தலாக இருக்கின்றன. 18 மே 2020 அமர்வு ஏன் மேலே குறிப்பிட்டபடியான வரிசையையும் ஒழுங்கையும் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நமக்கு சொல்கிறது. அதோடு, திட்டங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும்.

[16]. நிதி மசோதாக்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை

நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே பணத்தை செலவிட முடியும். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நோக்கங்களுக்கு வெளியே பணம் செலவிடப்பட்டால் அல்லது செலவிட முன்மொழியப்பட்டால், புதிய நாடாளுமன்ற ஆணை கோரப்பட வேண்டும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதாவது முகிதீன் அரசாங்கம் கோவிட்-19 நோயால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்காக கருவூல நிதியை செலவழிக்கிறது. சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பணத்தை செலவழித்த நிலையில், மேலும் தொடரவும், ஏற்கனவே செலவழித்த பணத்திற்காகவும், நாடாளுமன்றத்தின் அனுமதியை அரசாங்கம் பெற வேண்டும். அனுமதி வாங்குவதை தாமதப்படுத்துவது மக்களின் ஆணையை மீறுவதாகும். நாடாளுமன்றம் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறத் தவறினால், அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும்.

[17]. மாமன்னரின் உரைக்குப் பிறகு நாடாளுமன்றம் ஒத்திவைப்பு?

முகிதீன் அரசாங்கம், மாமன்னரின் உரைக்குப் பிறகு ‘நாடாளுமன்றத்தின் வணிகத்தை ஒத்திவைக்கும்’ என்று கூறியது.
நாடாளுமன்றத்தின் வணிகத்திற்காக ஒதுக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கையை நிறுத்தி வைப்பது பிரதமரின் பணி அல்ல.
இப்போது நாம் மிகவும் வித்தியாசமான சூழ்நிலையில் உள்ளோம். நாடாளுமன்ற அமர்வின் போது ஓர் உரை மட்டுமே இருக்கும் என்றும், அந்த உரைக்குப் பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அது அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் உரைக்குப் பின் இருக்கும் விஷயங்களும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கட்டளை உண்டு.

மாமன்னரின் செய்திக்குப் பிறகு, சபாநாயகர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார். பின்னர், பரிசீலிக்க மனுக்கள் உள்ளன, அமைச்சர்கள் கேள்வி நேரம், அமைச்சர்களின் வாய்வழி பதில்கள், பொது முக்கியத்துவம் குறித்த அவசர திட்டம், அமைச்சர்களின் அறிக்கைகள், அஞ்சலி, இரங்கல் பேச்சு, தனிப்பட்ட விளக்கங்கள் உட்பட இன்னும் உள்ளன.

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அன்றைய வரிசைமுறை என்ன, நிகழ்ச்சி நிரலில் என்ன இருக்கிறது என்பதை தீர்மானிக்க வேண்டும். எனவே நாடாளுமன்ற சபையில், பிரதம மந்திரி முன்னுரிமையை அனுபவிப்பவர் அல்ல. சபாநாயகரே முன்னுரிமையை அனுபவிப்பார். சபாநாயகரின் முடிவு இறுதியானது. அவரது வார்த்தைகளை மெளனமாகக் கேட்க வேண்டும். முதலில் என்ன, அடுத்தது என்ன என்பதை அவர் தீர்மானிக்கலாம். அவர் நாடாளுமன்றத்தின் அமர்வை ஒத்தி வைக்கலாம். அவருக்கு கிட்டத்தட்ட வரம்பற்ற அதிகாரங்கள் உள்ளன. பிரதம மந்திரி நாடாளுமன்றத்தின் ஊழியரானதால் அவர் முன்னுரிமையை அனுபவிப்பதில்லை.
[18]. மாமன்னரின் உரை நாடாளுமன்றத்தின் ‘வணிகத்தை பரிவர்த்தனை செய்வது’ அல்ல
முதலாவதாக, பாராளுமன்ற சபையில் ‘உரையாற்ற’ மாமன்னருக்கு உரிமை உண்டு. அது ஒரு அரசியலமைப்பு முறை.
மாமன்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தைத் திறப்பதும், உரையை வாசிப்பதும் மட்டும் 14வது கட்டளையின் கீழ் ‘ஒரு கூட்டத்திற்கு’ அர்த்தமாக முடியாது. அத்தகைய பேச்சு, சபையின் ‘வணிகத்திற்கு’ சமம் என்று அரசியலமைப்பில் எங்கும் அறிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தின் ‘வணிகம்’ என்ற சொல் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பான விவாதங்களைக் குறிக்க வேண்டும்.

ஆகவே, மாமன்னரின் உரை நாடாளுமன்றத்தில் ‘வணிகம்’ ‘பரிவர்த்தனை’ செய்யப்பட்டது என்று கூறுவதும், அது ஒரு கூட்டம் அல்லது ஒரு அமர்வு என்று என்றும் கூறுவதும் சட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது. சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது ஆகும்.

[19]. வாக்களித்த மக்களின் குரலை நாடாளுமன்றம் மெளனமாக்க வேண்டுமா?

மக்களின் குரல்களைக் கேட்க வேண்டிய ஒரு இடம் – பிரதிநிதிகள் சபை. அரசாங்கம் கூறுவது போல் செய்தால், மக்களை பிரதிநிதிபடுத்தும் நாடாளுமன்றத்தில், மக்களின் குரல் அமைதியாகிப் போய்விடும்.
நாடாளுமன்றத்தின் ஒத்திவைப்பினால், இயற்கையாகவே சட்டத்தின் கீழ், மே 18 அன்று நாடாளுமன்ற ‘கூட்டம்’ இல்லை என்றே பொருள்படுகிறது.
ஏன்?

மே 18 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் எந்தவொரு கூட்டமும், 14வது கட்டளையின் கீழ் அமைக்கப்பட்ட ‘வணிக ஒழுங்கைக் கருத்தில் கொள்ளாமல் நடத்தப்பட்டதால், அது ஒரு ‘கூட்டத்திற்கு’ பொருந்தாது.

சட்டத்தில் ‘கூட்டம்’ இல்லை என்றால், ஆணை 90 இன் கீழ் ‘அமர்வு’ இருக்க முடியாது.
14வது கட்டளை ஒரு காகித மாயையாகவே இருக்கும்.

ஆகையால், மாமன்னரின் உரைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் 18 ஆம் தேதி கூட்டப்பட்ட நாடாளுமன்ற கூட்டம், நிச்சயமாக ஒரு கூட்டமல்ல. அது நாடாளுமன்றத்தின் செயல்பாடும் அல்ல. 14வது கட்டளையின் கீழ், எதுவும் ‘பரிவர்த்தனை’ செய்யப்படவில்லை. கட்டளையின் வரிசை பின்பற்றப்படவில்லை. அது ஒரு கூட்டமாக செல்லுபடியாகாது. ஆகவே, நாடாளுமன்ற அமர்வும் இல்லை. இந்த காரணங்களுக்காக, அதை சவால் செய்யப்பட்டு ஒரு முடிவுக்காக காத்திருப்பது சாத்தியமாகும்.

[20]. தீர்வு என்ன?

இதற்கான பதில், சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே.

சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முதன்மையானவர். நாடாளுமன்றத்தின் நடைமுறையை கட்டுப்படுத்தி அதன் வணிகம் ‘பரிவர்த்தனை செய்யப்பட வேண்டியதை அவர் உறுதிசெய்ய வேண்டும். அதன் பணிகள் தொடர அவர் வழிநடத்த வேண்டும்.
அவர் நாடாளுமன்றத்தின் ‘வணிகத்தை’ மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் ‘பரிவர்த்தனை’ செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற கட்டுப்பாடு சபாநாயகரிடம் இருப்பதால், பிரிவு 55 இன் கீழ் 6 மாத காலம் முடிவடையும் கடைசி தேதி ஜூன் 18 ஆகும். 9(2)(a) இன் கட்டளையின் கீழ் அடுத்த கூட்டத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச நாட்கள் 28 நாட்கள் ஆகும். அறிவிப்பு வழங்கப்படவேண்டிய காலத்தை 28 நாட்களிலிருந்து குறைக்க சபாநாயகர் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தாவிட்டால், நேரம் பற்றாமல் போகும். எப்படியிருந்தாலும், அனைத்து ஆவணங்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்கான அனைத்து அறிக்கைகளையும் தயாரிக்க இப்போது நேரமில்லை.

சபாநாயகர் நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டை எடுத்து, விவாதத்திற்கான தீர்மானங்களை முன்வைக்க வேண்டும். 14வது கட்டளையின் கீழ் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பரிமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதை தாமதப்படுத்தினால், முழு தேசமும் மே 18 அன்று நடைபெற்ற கூட்டம் 14வது கட்டளைக்கும், அரசியலமைப்பிற்கும், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கும் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கும் முரணானதாக ஆகிவிடக்கூடிய அபாயத்தில் உள்ளது.