முதல் காலாண்டில் வேலை இழப்புகள் 42 சதவீதம் அதிகரித்துள்ளன – சொக்ஸோ

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் காலாண்டில் நாட்டில் வேலை இழப்புகள் 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) வேலை காப்புறுதி பிரிவு (எஸ்ஐபி) Sistem Insurans Pekerjaan (SIP) Pertubuhan Keselamatan Sosial (Perkeso) தெரிவித்துள்ளது.

‘வேலைவாய்ப்பு, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு, தொகுதி 4/2020, கோவிட்-19, வேலை இழப்பு மீதான தாக்கம்’ என்ற தலைப்பிலான அறிக்கையில், தொற்றுநோய் பல வணிகங்களை பாதித்துள்ளது என்றும், இதன் விளைவாக தேவைகள் 37 சதவீதம் குறைந்துள்ளதாகவும் வழக்கம் போல் செயல்பட முடியவில்லை (42 சதவீதம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த போக்கு 2020 ஏப்ரல் முதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 அடுத்தடுத்த ஒவ்வொரு காலாண்டிலும் வேலை இழப்புகள் 50 சதவீதம் அதிகரித்து ஆண்டுக்கு 200 சதவீதமாக அதிகரிக்கும்” என்று இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை இழப்பு விகிதம் 1997 ஆம் ஆண்டில் ஆசிய நிதி நெருக்கடியின் போது 3.2 சதவீதமாகவும், 2018 பொருளாதார வீழ்ச்சியின் போது 3.7 சதவீதமாகவும் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் நான்கு சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பெரியளவிலான பணிநீக்கங்களைத் தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள ‘வேலைவாய்ப்பு தக்கவைப்பு திட்டம் (ஈஆர்பி)/Program Pengekalan Pekerjaan (ERP)’ மற்றும் ‘வேலைவாய்ப்பு மானியத் திட்டம் (பி.எஸ்.யூ)/Program Subsidi Upah (PSU)’ ஆகிய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 1997ல் ஆசிய நிதி நெருக்கடியின் போது வேலையின்மை விகிதங்கள் போலவே ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இளைஞர்களின் வேலை இழப்பு விகிதம் எட்டு முதல் 11 சதவிகிதத்தில் உள்ளது. இருப்பினும், இவ்வயதினரே பணியில் இருந்து நிறுத்தப்படுவதற்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.

“61 சதவிகிதம் வேலையின்மை 40 வயது மற்றும் அதற்கு கீழ்பட்டவர்களில் உள்ளது என்று LOE தரவு காட்டுகிறது. 31 முதல் 40 வயது உள்ளவர்கள் 32 சதவிகிதம், 30 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் 29 சதவிகிதம் பணிநீக்கங்களை சந்திக்கின்றனர்.

“பெண் தொழிலாளர்களை விட ஆண் தொழிலாளர்கள் 60 சதவிகிதம் பணிநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் பெற்றுள்ளனர். இது தொழிலாளர்களில், பெண்களை விட ஆண் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர் என்ற உண்மையை பிரதிபலிக்கிறது” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் சொக்ஸோவில் பதிவுசெய்யப்பட்ட 7.5 மில்லியன் செயலில் உள்ள ஊழியர்களில் 1.458 மில்லியன் பேர் சுற்றுலா தொடர்பான துறையில் பணியாற்றியுள்ளனர், 1.457 மில்லியன் பேர் உற்பத்தியில் உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

“சுற்றுலாத் துறையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட பெரிய முதலாளிகளை உள்ளடக்கிய வணிகங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்பட்டதில் ஆச்சரியமில்லை. அதே நேரத்தில் உற்பத்தித் துறை மொத்தத்தில் 23 சதவிகிதம் தங்கள் தொழிற்சாலைகளை மூடிய பின்னர் செலவுகளைக் குறைக்க பெரும்பாலான தொழிலாளர்களை நிறுத்தியுள்ளது,” என்று அறிக்கை கூறியுள்ளது.

எவ்வாறாயினும், தங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யாத முதலாளிகள், ஊதியங்களைக் குறைக்கும் முறைகளை கையாண்டு செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அவர்களின் சம்பளம் பொதுவாக புதிய ஊழியர்களை விட 45 சதவீதம் அதிகமாக இருக்கும்.

41 சதவிகிதத்தில், 30 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட இளம் தொழிலாளர்கள் சொக்ஸோவில் பதிவுசெய்த செயலில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலோர் உள்ளனர். இது 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆறு சதவிகிதம் அதிகரித்துள்ளது. அவர்களில், 70 சதவிகிதத்தினர் இரண்டு வருடங்களுக்கும் குறைவான வேலை அனுபவம் கொண்டவர்கள்.
இதற்கிடையில், சொக்சோவில் பதிவுசெய்யப்பட்ட 40 வயது மற்றும் அதற்கும் குறைவானவர்களின் சதவீதம் 2019இல் நான்கு சதவீதம் குறைந்துள்ளது. இந்த குழுவில், 84 சதவீதம் பேர் ஒரே நிறுவனத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியுள்ளனர் என்று அறிக்கை கூறியுள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், கெடா மற்றும் பினாங்கு ஆகிய ஐந்து மாநிலங்களில் 79 சதவீத வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

“இதில், சிலாங்கூர் 32 சதவிகிதத்துடன் மிக உயர்ந்துள்ளது. ஆனால் மொத்த வேலைகளிலும் 30 சதவிகிதம் சிலாங்கூரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது, 2018ஆம் ஆண்டிலிருந்து ஆறு சதவிகித அதிகரிப்பைக் குறிக்கிறது. மேலும் கவலைக்குரியது என்னவென்றால், கெடா மாநிலம், குறைந்த எண்ணிக்கையிலான முதலாளிகளைக் கொண்டிருந்தாலும் ஆறு வேலைகளில் ஒன்றை இழக்கும் சூழ்நிலையைக் கொண்டுள்ளது.

“ஜொகூரில் வேலை இழப்புகள் முக்கியமாக உற்பத்தித் துறையில் 37 சதவீதமும், சுற்றுலா தொடர்பான தொழில்கள் 36 சதவீதமும் உள்ளன” என்று அறிக்கை கூறியுள்ளது.

கிளந்தான், மலாக்கா, நெகிரி செம்பிலான், பேராக், சபா, சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் லாபுவான் போன்ற மாநிலங்களில், வேலை இழப்புகள் சுற்றுலா தொடர்பான துறையில் குவிந்துள்ளன. புத்ராஜெயா உள்ளிட்ட பிற மாநிலங்கள் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி), சரவாக் கட்டுமான துறைகளில் ஈடுபட்டுள்ளன, பகாங் (வகைப்படுத்தப்படாத பிற துறைகள்), கெடா, பெர்லிஸ், பினாங்கு மற்றும் திரெங்கானு (அனைத்து உற்பத்தி துறை).

“சராசரியாக, ஒவ்வொரு முதலாளியும் பணிநீக்கம் செய்யப்படும் ஒரு தொழிலாளருக்கு 15 வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களில் இந்த விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஓர் ஊழியருக்கு 69 வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர்,” என்று அறிக்கை கூறியுள்ளது.