டாக்டர் மகாதீர் இனி பெர்சத்து கட்சி உறுப்பினர் அல்ல – பெர்சத்து உச்ச மன்றம் முடிவு

செர்சத்து கட்சியில் டாக்டர் மகாதீர் முகமதுவின் உறுப்பிய உரிமை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்று நேற்று பெர்சத்து உச்ச மன்ற (எம்.பி.டி) கூட்டம் உறுதி செய்தது.

டாக்டர் மகாதீரைத் தவிர, உடனடி உறுப்பிய உரிமையை இழந்தவர்களின் பட்டியலில் முக்ரிஸ் மகாதிர், சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், அமிருதீன் ஹம்சா மற்றும் மஸ்லீ மாலிக் ஆகியோரும் அடங்குவர்.

இன்று ஒரு அறிக்கையில், பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீன், பாக்காத்தான் கட்சியிலிருந்து விலகுவதற்கான கட்சியின் முடிவையும் நேற்றைய கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறினார். அம்முடிவு பிப்ரவரி 23 அன்று பெர்சத்து உச்ச மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“நேற்று எம்.பி.டி கூட்டத்தின் ஒப்புதல் மற்றும் தீர்மானத்துடன், மதம், இனம் மற்றும் நாட்டை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தில் ஒற்றுமையுடன் இருக்குமாறு கட்சி உறுப்பினர்கள் மற்றும் அடிமட்டத் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஹம்சா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டம் மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க (PAUM) கிளப்ஹவுஸில், தலைவர் முகிதீன் யாசின் தலைமையில் நடைபெற்றது. இது இரவு 11.40 மணியளவில் முடிந்தது. ஆனாலும், கூட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே காத்திருந்த ஊடகங்களை சந்திக்க முகிதீன் மறுத்துவிட்டார்.

டாக்டர் மகாதிர் முகமதுக்கு ஆதரவு அளிப்பதாக அறியப்பட்ட பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாக, சில பிரச்சினைகள் குறித்து அதிருப்தி அடைந்து, இரவு 10.45 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

அவர்கள் அபு பாக்கார் யஹ்யா, அக்ரம்ஷா சனுசி, தாரிக் இஸ்மாயில் மற்றும் ஆர்மடாவின் உல்யா ஹுசமுடின் ஆவர்.

நேற்றைய கூட்டத்தில், பெர்சத்துவின் உச்ச மன்றம், கட்சியால் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளுக்கு, அதாவது முகிதீனை செயல் தலைவராக நியமித்தல், மர்சுகி யஹ்யாவை பொதுச்செயலாளராக நீக்குதல் போன்ற விடயங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.