பிரதமர் பதவி இல்லை என்றால் கூட்டணியை முடிவுக்கு கொண்டுவர தயார் – டாக்டர் மகாதீர்

பிரதமர் பதவிக்கு அவர் போட்டியிடுவதை கட்சி தொடர்ந்து எதிர்த்தால், பி.கே.ஆருடனான தனது கூட்டணியை முடிவுக்கு கொண்டுவர டாக்டர் மகாதீர் முகமது தயாராக உள்ளார் என தெரிவித்துள்ளார்.

சின் செவ் டெய்லிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், பாக்காத்தான் பிளஸின் பிரதமர் வேட்பாளருக்கான தடைகள் தீர்க்கப்படாவிட்டால், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் பணியாற்றுவதை நிறுத்துவதாக மகாதீர் கூறினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக வருவதற்கு வேறு வழியைக் கண்டுபிடிப்பேன் என்று மகாதீர் கூறினார்.

இருப்பினும், டிஏபி மற்றும் அமானா கட்சிகள் அவரை பிரதமராக ஆதரித்துள்ளதால், அந்த இரு கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவார் என்று மகாதீர் கூறினார்.

“நான் அவருடன் (அன்வார்) இனி ஒத்துழைக்க மாட்டேன் ஏனெனில் அவர் என்னுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. பிரதமர் ஆவதற்கு நான் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். வேறு சில வழிகள் இருக்கும்..” என்று அவர் கூறினார்.

அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன்பு ஆறு மாதங்களுக்கு மகாதீர் பிரதமராகவும் அந்த காலகட்டத்தில் அவரது துணை பிரதமராக அன்வார் இருக்குமாறுமான யோசனை தோல்வியடைந்தால் பாக்காத்தான் பிளஸை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக மகாதீர் கூறினார்.

“(பிரதமராக பரிந்துரைக்கப்படாவிட்டால்) நான் விலகுவேன் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

மகாதீரும் பெர்சத்துவும் பாக்காத்தானில் இணைவதற்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) மற்றும் முன்னாள் பக்காத்தான் ரக்யாட் எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டார்கள் என்பது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்தார் மகாதீர்.

“அவர்கள் நீண்ட காலமாக எதிர்க்கட்சியாக உள்ளனர். நான் அவர்களுடன் சேருவதற்கு முன்பு, 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள், ஆனால் தோல்வி அடைந்தார்கள். அவர்களால் வெல்ல முடியாது.”

“நான் அவர்களுடன் 14வது பொதுத் தேர்தலில் சேர்ந்தேன். மலாய்க்காரர்களின் ஆதரவுடன், நாங்கள் வெற்றி பெற்றோம்.”

“அவர்கள் மலாய் வாக்குகளை வெல்ல வேண்டும். நான் அவர்களுக்கு மலாய் வாக்குகளை கொண்டு வர முடியும் என்று நினைத்தனர். பெர்சத்து மலாய்க்காரர்களின் கட்சி. மலாய்க்காரர்கள் பல இனக் கட்சியை ஆதரிக்க மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

கருத்துக்காக பி.கே.ஆர் மற்றும் அன்வாரை மலேசியாகினி தொடர்பு கொண்டுள்ளது.