‘கொரோனா மேலும் மோசமடையும், அனைவரும் மாஸ்க் அணியுங்கள்’ – எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறைவதற்கு முன்னர் மேலும் மோசமடையலாம் எனவும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பரவத்தொடங்கியது முதலே அந்நாட்டு அதிபர் டிரம்ப் வைரஸ் தொடர்பான புள்ளிவிவரங்களை தினமும் வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு வந்தார்.

ஆனால் கடந்த ஏப்ரல் மாத இறுதிக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளைமாளிகை அதிபர் டிரம்ப் மேற்கொண்டுவந்த சந்திப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் தொடர்பாக வெள்ளைமாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மீண்டும் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் நாட்டில் வைரஸ் மேலும் மோசமடையலாம் என தெரிவித்து அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-

அமெரிக்காவில் சில பகுதிகள் (மாகாணங்கள்) கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் சில பகுதிகளில் (மாகாணங்கள்) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால் துரதிஷ்டவசமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறையும் முன்னர் இன்னும் மோசமடையலாம். தெற்கு மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

அமெரிக்காவில் வாழும் அனைவரிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத இடங்களில் மாஸ்க் அணியுங்கள்.

நீங்கள் மாஸ்க் அணிவதை விரும்புகிறீர்களோ? இல்லையோ? மாஸ்க் அணிவது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நானும் எங்கு சென்றாலும் மாஸ்க் கொண்டு செல்கிறேன். இங்கும் மாஸ்க் கொண்டு வந்துள்ளேன். நான் தேவைப்படும் இடங்களில் மாஸ்க் பயன்படுத்திவருகிறேன்.

கொரோனா தடுப்பூசி வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் நினைக்கும் நாட்களை விட மிகமிக விரைவில் கொரோனா தடுப்பூசி நமக்கு வந்துவிடும்.

இந்த சீன வைரஸ் மறைந்து விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

malaimalar