ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம்

மாஸ்கோ, 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு பிரபல மருந்து நிறுவனங்களான ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவற்றுடன் இங்கிலாந்து அரசு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுப்பூசி ஒன்றை உருவாக்குகின்றன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அங்கீகாரத்தை அடுத்த ஆண்டு கோடை காலத்துக்குள் பெற்று விடலாம் என இந்த மருந்து நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இந்த நிலையில் இவ்விரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது பற்றி இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மா கூறுகையில், “ஜி.எஸ்.கே. மற்றும் சனோபி போன்ற பல விதமான நம்பிக்கைக்கு உரிய தடுப்பூசிகளின் ஆரம்ப அணுகலை நாம் பாதுகாப்பது முக்கியம். இதனால் பொதுமக்களை பாதுகாக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் முடியும்” என்று கூறினார்.

ஏற்கனவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கூட்டாக உருவாக்குகிற தடுப்பூசியை 10 கோடி டோஸ் வாங்குவதற்கு இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

dailythanthi