மாலத்தீவுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி உதவியை வழங்கியது இந்தியா

இந்திய அரசாங்கத்தின் சார்பில் மாலத்தீவிற்கு 250 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, கொரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மாலத்தீவு அதிபர் இப்ராகீம் முகமது சோலீ இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக நடந்த உரையாடலின் போது மாலத்தீவு அதிபர் இது குறித்து பேசினார்.

இதனை தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் சார்பில் மாலத்தீவு அரசிற்கு 250 மீல்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா மாலத்தீவு வெளியியுறவுத் துரை அமைச்சகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாலத்தீவு வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித், நிதி மந்திரி இப்ராஹிம் அமீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தலைவர் பாரத் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிதியுதவியானது மாலத்தீவு அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமான விதிமுறைகளின் கீழ் வழங்கப்படுவதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியை கருவூலப் பத்திர விற்பனை மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) திருப்பிச் செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் அவகாசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

dailythanthi