கொரோனா தடுப்பூசி : அமீரகத்தில், முதன்முதலாக சுகாதார மந்திரி உடலில் செலுத்தி பரிசோதனை

கொரோனா தடுப்பூசியை முதன்முதலாக அமீரக சுகாதாரத்துறை மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

சுகாதாரத்துறை மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உடலில் ஊசி செலுத்திய போது எடுத்த படம்.

அபுதாபி: அமீரகத்தில் சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் வகையில் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை முதன்முதலாக அமீரக சுகாதாரத்துறை மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

அமீரகத்தில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இந்த கொரோனா தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கான ஊசியை அமீரகத்தில் முதன்முதலாக நேற்று அமீரக சுகாதாரத்துறை மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உடலில் செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்பூசி உடலில் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனையின் போது நல்ல முடிவுகளை தெரிவித்திருப்பது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த தடுப்பூசி பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் இருந்து வருகிறது. இந்த தடுப்பூசி சட்ட மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப செலுத்தப்படுகிறது. மேலும் இதற்கான உரிமம் உள்ளிட்ட அனுமதிகளை விரைவாக வழங்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கொரோனா தடுப்புக்கான தேசிய மருத்துவ குழுவின் தலைவரும், 3-வது கட்ட தடுப்பூசி பரிசோதனை குழுவின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் நவல் அல் காபி கூறும்போது, “இந்த தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்ட 6 வாரங்களில் 125 நாடுகளைச் சேர்ந்த 31 ஆயிரம் தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதனை போட்டுக் கொண்ட சிலருக்கு சிறிய அளவில் பாதிப்பு இருந்துள்ளது. எனினும் மற்ற மருந்துகளை போல் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இல்லை. இந்த தடுப்பூசி பரிசோதனை சுகாதாரத்துறையுடன் இணைந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

malaimalar