50 லட்சம் என திசைதிருப்பும்போது, 45 லட்சம் பேர் குணமடைந்தனர் என்பதை மறந்துவிடுகிறோம்- மத்திய அமைச்சகம்

கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சம் என பேசும்போது, குணமடைந்தவர்களை மறந்துவிடக்கூடாது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்து நிற்கின்றன.

தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 75 ஆயிரத்து 083 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உயர்ந்தது. இது மத்திய, மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,053 ஆகும். இதன் மூலம் மொத்த பலி  எண்ணிக்கையும் 88,935 ஆக அதிகரித்து இருக்கிறது.

தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 44 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் எல்லோரும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர் என்று திசைதிருப்பும்போது, சுமார் 45 லட்சம் பேர் குணமடைந்ததை மறந்து விடுகிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளார்.

malaimalar