கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய பெண்கள்

கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை நேரில் சென்று சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்; கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விடுதி ஒன்றில் வசிக்கும் விஜய் பி நாயர் என்பவர், வி ட்ரிக்ஸ் சீன் என்ற பெயரில் யூ ட்யூப்சேனல் நடத்தி வருகிறார். இந்த யூட்யூப் சேனலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், கொச்சைப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். சமீபத்தில், திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள், மகளிர் அமைப்பினர் குறித்தும் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பின்னணி குரல் கலைஞரான பாக்கியலட்சுமி, மகளிர் அமைப்பை சேர்ந்த தியா சனா மற்றும் சிலர், கடந்த சனிக்கிழமை விஜய் பி.நாயர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவர் மீது கருப்பு மை ஊற்றியதோடு அடித்து உதைத்தனர்.

அவர் கைகளாலேயே அவர் பதிவிட்ட வீடியோக்களை அழிக்க வைத்ததோடு, மன்னிப்பு கேட்க வைத்து அதனை யூட்யூபில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து தனது இருப்பிடம் புகுந்து அடித்து உதைத்து செல்போன், லேப்டாப், ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச்சென்றதாக விஜய் பி. நாயர் கொடுத்த புகாரில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட 3 பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் பெண்களை ஆபாசமாக பேசி பதிவிட்ட விஜய் பி நாயர் மீது ஜாமினில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பெண்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பினராயி விஜயன் குரல் கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து பேசிய கேரள சுகாதாரத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, பெண்களை அவமானப்படுத்தும் சமூகவலைதளங்களின் தாக்குதலை அரசு பொறுத்துக்கொள்ளாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வழக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அரசின் குரலும் கேரளாவில் கவனம் பெற்றுள்ளது

dailythanthi