சொத்துரிமை ஆவண அட்டை திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடில்லி,:கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சொத்துரிமை ஆவண அட்டை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ”பல ஆண்டுகளாக தாங்கள் வசித்து வந்த இடத்துக்கான சொத்து உரிமை ஆவணம் கிடைப்பதும், நம் நாடு சுயசார்பு நிலையை எட்டுவதற்கான ஒரு வழியே,” என, குறிப்பிட்டார்.

கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, ‘ஸ்வமித்வா’ திட்டத்தின் கீழ், சொத்துரிமை ஆவண அட்டை அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாற்றம்

இதன்படி, நாடு முழுதும், 763 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு, நில உரிமை ஆவண அட்டைகள் வழங்கப்பட்டன. ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நம் கிராமங்களில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும், ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம் இது. உலகெங்கும், மூன்றில் ஒரு பங்கு மக்களிடம் மட்டுமே, தங்கள் வசிப்பிடம் குறித்த உரிய ஆவணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் சொத்துக்கான உரிமை ஆவணம் கிடைப்பதால், கிராமங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னம்பிக்கையை பெறுவதுடன், சுயசார்பு நிலையையும் எட்ட முடியும். நில ஆவணங்கள் மூலம், வங்கிகளில் இருந்து கடன்களை பெற்று, சுய தொழில் செய்யும் வாய்ப்பு, அவர்களுக்கு கிடைக்கும். இது, நம் நாடு சுயசார்பு நிலையை எட்டுவதற்கான ஒரு வழியாக அமையும்.

அக்கறையில்லை

அடுத்த, நான்கு ஆண்டுகளுக்குள், நாடு முழுதும் இந்த திட்டத்தின் வாயிலாக, அனைத்து வீடுகளுக்கும் உரிய ஆவணம் கிடைப்பதை உறுதி செய்வோம். கடந்த ஆறு ஆண்டுகளில், கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திஉள்ளோம். முந்தைய, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள், ஆறு ஆண்டுகளில் செய்துள்ளோம்.

முந்தைய ஆட்சியாளர்களுக்கு, கிராமங்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. விவசாயிகள், கிராமவாசிகள், சுயசார்புடன் இருப்பது, அவர்களுக்கு பிடிக்கவில்லை.தற்போது, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள், மானியங்களை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம்.

பொய் பிரசாரம்

ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த புரோக்கர்கள், விவசாயிகளுக்கு எதிராக நாங்கள் செயல்படுவதாக, பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கிராமங்களில் பிரச்னைகள் இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் செய்ய முடியும் என நினைக்கின்றனர். அரசுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.

திட்டம் என்ன?

‘ஸ்வமித்வா’ திட்டம் குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, அவர்களது வீடு மற்றும் வீடு அமைந்துள்ள சொத்து உரிமையை அளிக்கும் வகையில், ஸ்வமித்வா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ஏப்., மாதத்தில் அறிவித்தார். நாடு முழுதும் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு, பிரதமர் பங்கேற்ற விழாவின் வாயிலாக, ஆவண அட்டைகள் வழங்கப்பட்டன. அதன்படி, 763 கிராமங்களைச் சேர்ந்த, 1.32 லட்சம் பேருக்கு ஆவண அட்டை வழங்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும், 6.62 லட்சம் கிராமங்களில், வரும், 2024ம் ஆண்டுக்குள் இந்த ஆவண அட்டை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், கிராம மக்கள், வங்கிக் கடன் வசதி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

dinamalar