டிசம்பர் 5-ல், பத்து சாப்பி இடைத்தேர்தல்

பத்து சாப்பி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் அப்துல் கானி சாலே இன்று தெரிவித்தார்.

மத்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 60 நாள் காலக்கெடுவின் கடைசி நாளில், வாக்குப்பதிவு நாளை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. தற்போது நடைபெற்று வரும் கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றக் கோரிக்கையைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 54-வது பிரிவின்படி, ஓர் இடம் காலியாகி 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். பத்து சாப்பி இருக்கை காலியானது குறித்து, அக்டோபர் 6-ம் தேதி நாடாளுமனறச் சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருன் தேர்தல் ஆணையத்திடம் அறிவித்தார்.

நவம்பர் 23-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தினமாகவும், ஆரம்ப வாக்களிப்பு டிசம்பர் 1-ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.