கோவிட் -19 : மூன்றாவது அலை 1,000 -க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பாதித்துள்ளது

கடந்த மாதம், கோவிட் 19-இன் மூன்றாவது அலை நாட்டைத் தாக்கியதில் இருந்து, 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

செப்டம்பர் 20 முதல் நேற்று வரையில், 7 முதல் 12 வயது வரையிலான மாணவர்களில் மொத்தம் 587 பாதிப்புகளும் 13 முதல் 18 வயதுடையவர்களில் 670 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம், கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து, 7 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மொத்தம் 830 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதே காலகட்டத்தில், 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் மொத்தம் 1,315 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று புத்ராஜெயாவில் தனது தினசரி செய்தியாளர் கூட்டத்தில் நூர் ஹிஷாம் கூறினார்.

கோவிட் 19-இன் மூன்றாவது அலையில், இதுவரை 12 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அப்பள்ளிகள் அனைத்தும் குறிப்பிட்ட திரளைகளுடன் சம்பந்தப்பட்டவை என்றும் அவர் சொன்னார். அவை, நெகிரி செம்பிலானில் 3 பள்ளிகள், ஜொகூரில் 3 பள்ளிகள், கோலாலம்பூரில் 2 பள்ளிகள், பினாங்கு, மலாக்கா, சரவாக் மற்றும் புத்ராஜெயாவில் 1 பள்ளி என தெரியவந்துள்ளது.