கோவிட் 19 : இன்று 649 புதியத் தொற்றுகள், இறப்புகள் இல்லை

நாட்டில் 649 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், அக்டோபர் 7 தொடக்கம், முதல் முறையாக இறப்புகள் ஏதும் இன்று பதிவாகவில்லை.

352 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 89 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையே, இன்று 685 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும் இன்று, 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். அவை, சக்தி திரளை – சபா, லாஹாட் டத்து மாவட்டம், துகுசோன் திரளை – சபா, கோத்த பெலோட் மாவட்டம், பா மேடான் திரளை – சிலாங்கூர், செப்பாங் மாவட்டம், தாமான் லாவுட் திரளை – சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் மற்றும் தாமான் பூங்கா திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான், கோலா பிலா & ஜெலுபு மாவட்டங்கள் ஆகியவையாகும்.

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 135, நெகிரி செம்பிலானில் 43, கெடாவில் 37, கோலாலம்பூரில் 21, லாபுவானில் 17, ஜொகூரில் 10, சரவாக்கில் 8, பேராக்கில் 5, பஹாங், மலாக்கா, திரெங்கானு மற்றும் புத்ராஜெயாவில் 1.