நேபாளத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு

நேபாளத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சீன அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பீஜிங், நேபாளத்தில் சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுக்கிறது.

இந்த நிலையில் நேபாளத்தின் 5 மாவட்டங்களில் 150 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து தன் வசமாக்கிக் கொண்டதாக இங்கிலாந்தில் வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் இருந்து சீனா இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தனது ராணுவத்தை சீனா குவித்து வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சீனா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் பொய்யான செய்தி என கூறியுள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென் பின் இதுகுறித்து கூறுகையில், “இங்கிலாந்து நாளிதழில் வெளியான செய்திக்கு எந்த ஆதாரமும் இல்லை. அது முழுக்க முழுக்க ஆதாரமற்ற செய்தி. வெறும் வதந்தி. குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்கள் அதற்கான ஆதாரத்துடன் வரவேண்டும். ஆனால் அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை” என்றார்

dailythanthi