கோவிட் 19 : இன்று 660 புதியத் தொற்றுகள், 4 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 660 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 630 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று, சபாவில் 2 மற்றும் பேராக்கில் 2 என 4 மரணங்கள் நேர்ந்துள்ளன. ஆக, நாட்டில் இதுவரை 322 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

திரெங்கானு, பஹாங் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 41 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

387 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 141, நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் 31, பினாங்கு மற்றும் பேராக்கில் 16, லாபுவானில் 13, கெடாவில் 11, மலாக்காவில் 4, சரவாக், கிளந்தான் மற்றும் ஜொகூரில் 3, மற்றும் புத்ராஜெயாவில் 1.

மேலும் இன்று, புதிதாக 8 திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். அவை :-

சபாரு திரளை – சபா, லாஹாட் டத்து மாவட்டம்; தொம்ஹெர் திரளை – சபா, டானாவ் மாவட்டம்; கார்டன் திரளை – சபா, தாவாவ் மாவட்டம்; புத்ரா-18 திரளை – புத்ராஜெயா மற்றும் சிலாங்கூர், பெட்டாலிங் & செப்பாங் மாவட்டங்கள்; முர்னி திரளை – கோலாலம்பூர், செராஸ் & கெப்போங் மாவட்டங்கள் மற்றும் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம்; ஶ்ரீ பாசீர் திரளை – பினாங்கு, நோர்த் ஈஸ்ட் மாவட்டம்; பெசி டெமாக் திரளை – சரவாக், கூச்சிங் மாவட்டம்; பாரிட் காஸ்ஸான் திரளை – ஜொகூர், தங்காக் மாவட்டம்.