நஜிப் : மக்கள் நலனுக்காக, துரோகி என்று அழைக்கப்படுவது ஓர் இழப்பல்ல

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவிதியைப் பாதுகாப்பதற்காக, அவருக்கு கெட்டப் பெயர் கிடைத்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

உண்மையில், நீண்ட காலத்திற்கு முன்பே “அத்தோக் மற்றும் அவரது கும்பல்” மூலம் பல்வேறு அழைப்புகளைப் பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.

“பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, நான் ஒரு கொலைகாரன், ஒரு கொள்ளைக்காரன், முரடன், விபச்சாரம் செய்பவன் அல்லது நாட்டு விற்பவன் என்று அழைக்கப்படுகிறேன் … நான் பொறுமையாக இருக்கிறேன்.

“மிக மோசமான உலக நெருக்கடியில் மக்கள் மிகவும் அவநம்பிக்கையுடன் இருந்த நேரத்தில், “துரோகிகள்”-ஆன நானும் எனது நண்பர்களும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது, அதனால் என்னை ஒரு “துரோகி” என்று அழைத்தாலும் அது ஓர் இழப்பாகாது?

“நீங்கள் என்னை கிட் சியாங் என்று அழைக்காதவரை, பிரச்சனையில்லை,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் கூறினார்.

2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரித்தால், முன்னாள் பிரதமர் மக்களுக்கு துரோகம் செய்கிறார் என்று அர்த்தம் எனக் கூறியத் தேசியக் கூட்டணி அரசு ஆதரவாளர்கள் கழகத்தின் தலைவர் ஷாஹிடான் காசிம் பற்றி நஜிப் அவ்வாறு குறிப்பிடுகிறார் என்று நம்பப்படுகிறது.

நேற்று மக்களவை விவாதத்தின் போது ஷாஹிடான், ஒன்று அல்லது இரண்டு தேசியக் கூட்டணி எம்.பி.க்கள் 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறியது, கூட்டணியில் உள்ள மூத்தத் தலைவர்கள் மீது “சந்தேகம்” உள்ளது என்று பொருள்படும்.

“நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன், இந்தப் பட்ஜெட்டை நிராகரிக்கும் எவரும், பெக்கானைச் சேர்ந்த எனது நண்பர் (நஜிப்) உட்பட, பட்ஜெட்டை நிராகரித்தார் என்றால், மக்களுக்கு அவர் துரோகம் இழைத்தார் என்று அர்த்தம், ஏனென்றால் மக்கள் காத்திருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

தேசியக் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும், தேசிய முன்னணியின் அனைத்து எம்.பி.க்களும் 2021 பட்ஜெட்டுக்கு ‘ஒட்டுமொத்தமாக’ வாக்களிக்க வேண்டும் என்றும் ஷாஹிடான் வலியுறுத்தினார்.