1எம்.டி.பி. – கோல்ட்மேன் சாச்ஸ், அரசாங்கம் இடையிலான இரகசியத்தன்மை விதி குறித்து என்.ஜி.ஓ. கேள்வி எழுப்பியுள்ளது

“இரகசியத்தன்மை விதி” காரணமாக, அரசாங்கம், 1எம்.டி.பி மற்றும் கோல்ட்மேன் சாச்ஸ் இடையேயான 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற தேசிய கூட்டணி அரசாங்கத்தின் முடிவு குறித்து சுதந்திரமான பத்திரிக்கை மையம் (Pusat Jurnalisme Bebas – சி.ஐ.ஜே) கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த முடிவில் “வெளிப்படைத்தன்மை மற்றும் பொது பொறுப்புக்கூறல்” இல்லையென என்று குறிப்பிட்டு, சி.ஐ.ஜே. தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

கடந்த நவம்பர் 17-ம் தேதி, சட்டத்துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசான், “ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதால், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதைத் தடுக்க”, ஒப்பந்தத்தின் விவரங்களை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை என்று மக்களவையில் கூறியிருந்தார்.

“வெளிப்படுத்துவதைத் தடுக்கும் அளவிற்குக் கடுமையான இரகசியத்தன்மை விதி இருந்தால், அரசாங்கம் ஏன் அந்த ஒப்பந்தத்திற்கு இசைந்தது,” என்று சிஐஜே நிர்வாக இயக்குனர் வத்ஷலா ஜி நாயுடு இன்று அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

“அத்தகைய ஒப்பந்தம் சமூகத்தின் நலன்கள், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைச் சேதப்படுத்தும் என்பதை நிச்சயமாக அரசாங்கமும் அதன் தலைவர்களும் அறிந்திருப்பார்கள், அப்படியானால், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடம் சமூகத்தால் ஆராயப்படாது என்பது இதன் பொருளா?

“இதுபோன்றவைதான் 1எம்.டி.பி.-இல் நடக்கும் முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளன, இது பொது நலனுக்கானப் பிரச்சினை,” என்று அவர் கூறினார்.

தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தாமல் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை சிஐஜே அறிந்திருப்பதாகவும், தவறாகப் பயன்படுத்துவதற்கான இலக்காககூட அது இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார் – எடுத்துக்காட்டாக, தேசியப் பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தகவல்கள்.

“இருப்பினும், இரகசியத்தன்மை எனும் ஒரு கருத்து விதிமுறையாக மாறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும், மேலும் இது சட்டபூர்வமாகப் பரப்பப்பட வேண்டிய தகவல்களைப் பகிர்வதிலிருந்து தடுப்பதற்கான ஓர் எளிய வழியாகப் பயன்படுத்தப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜூலை மாதத்தில், கோல்ட்மேன் சாச்ஸ் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM19 பில்லியன்) திருப்பித் தர ஒப்புக்கொண்டார், முதல் கட்டமாக, 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இரண்டு மாதங்களில் செலுத்த வேண்டும்.

அதனை அடுத்து, தவறானப் பரிவர்த்தனை தொடர்பான சொத்துக்கள், அரசாங்கத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், மீதமுள்ள 1.4 பில்லியன் டாலர் (RM5.97 பில்லியன்) செலுத்தப்பட வேண்டும்.

கோல்ட்மேன் சாச்ஸ் 1எம்.டி.பி.-உடன் 2009 மற்றும் 2014-க்கு இடையில், 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் (RM27.72 பில்லியன்) மதிப்புகொண்ட பத்திரங்களைத் (bond) திரட்டியுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்டில், பத்திரங்களை வழங்குதல் மற்றும் பல்வேறு 1எம்.டி.பி. பரிவர்த்தனைகள் தொடர்பாக, கோல்ட்மேன் சாச்ஸ் மீது மலேசிய வழக்குரைஞர்கள் 17 குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அச்சிக்கல்களைத் தீர்க்க வங்கி சில பரிந்துரைகளை வழங்குகிறது.

சில இரகசியத்தன்மை கொண்ட உட்பிரிவுகளை ஒப்புக்கொள்வதற்கு முன்னர், பொதுக் கருத்துக்களையும் மோசமான விளைவுகளையும் கருத்தில் கொண்டு, தக்கியுதீன் ஒரு விளக்கத்தை வழங்கத் தவறிவிட்டார் என்றும் வத்ஷலா கூறினார்.

“இரகசியத்தன்மை” என்ற கட்டாய நிபந்தனைகளைத் தெளிவாகக் கூற வேண்டும் என்றும், பின்வருவனவற்றில் சட்டபூர்வமான நியாயத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார் :-

  1. தீர்வு குறித்த தகவல்களை இரகசியமாக வைத்திருக்க வேண்டியதன் காரணம் மற்றும் நியாயமான நலன்கள்;
  2. இரகசியத்தன்மையின் நிபந்தனைகளை ஏன் பொது நலன் கருதி சட்டப்பூர்வமாக விலக்க முடியாது;
  3. அத்தகவல்களைப் பொதுமக்களிடம் வழங்குவதால் ஏற்படும் விளைவுகள் அல்லது பாதிப்புகள்;
  4. அத்தகவல்களை இரகசியமாக வைத்திருக்க வேண்டிய கால அவகாசம், மற்றும்;
  5. அவற்றை வெளிப்படுத்தும் தரப்பினருக்கு ஏற்படும் குறிப்பிட்ட சட்ட சுமைகள்.