‘நாடாளுமன்றம் விவாதத்திற்கான இடம், அமைச்சரின் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கானது அல்ல’

மக்களவை | எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், 2021 வரவுசெலவு திட்டம் குறித்த கேள்வி பதில் அமர்வுக்கான கால அவகாசத்தை, 20 நிமிடங்கள் என வரையறுத்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொரு அமைச்சருக்கும், அந்தந்த அமைச்சுகளுக்குக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க 20 நிமிடங்கள் மட்டுமே உள்ளன என்று மக்களவை சபாநாயகர் அஸ்ஹர் அஜீசன் ஹருன் தெரிவித்ததைத் தொடர்ந்து அன்வார் இவ்வாறு கேட்டார்.

“அமைச்சர் ஒரு விளக்கம் அளித்தார், நன்றி. ஆனால் இது அமைச்சரின் சொற்பொழிவைக் கேட்பதற்கான இடம் அல்ல. இது நாடாளுமன்றம், விவாதத்திற்குரிய இடம். நாம் அனைத்து எம்.பி.க்களையும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்றால், அவரின் வாதச் சுருக்கத்தை 20 நிமிடங்கள் கேட்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை,” என்றார் அன்வர்.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப, விவாதிக்கை, குறுகீடு செய்ய அந்த 20 நிமிடம் போதாது என்று அன்வர் கூறினார்.

“சில நெகிழ்வுத்தன்மையைக் கொடுங்கள், 80-க்கும் அதிகமான எம்.பி.க்கள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும், அதோடு விவாதத்திற்கான நேரத்தையும் அதிகரிக்க வேண்டும்.

“இல்லையெனில், நாடாளுமன்றம் இந்த முறையில் செயல்படாது,” என அவர் சொன்னார்.

பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அன்வரை ஆதரித்ததோடு; நாடாளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யவும் அஸாரை வலியுறுத்தினர்.

மீண்டும் கட்சித் தலைவர்களை அழைத்து, இந்த விவகாரம் குறித்து விரைவில் விவாதிப்பதாக அஸ்ஹர் சொன்னார்.