ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்

ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு டிரம்ப் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் நடப்பு அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வந்தார். பரவலான தேர்தல் மோசடி குறித்த ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து அதிபர் டிரம்ப் தேர்தலை ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யவதற்கு டொனால்டு டிரம்ப் சம்மதித்து இருக்கிறார். இருந்தபோதிலும் தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் டிரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என உறுதியாகக் கூறியுள்ள போதும், பைடன் அதிபர் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசு அமைப்பிடம் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்து இருக்கிறார்.

அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாகத் தெரிவித்திருந்தது. டிரம்பால் நியமிக்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை ஜோ பைடனை தேர்தல் வெற்றியாளராக உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, அதிபருக்கான அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த நடவடிக்கைகளை ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் அணியினர், இந்த அதிகார மாற்றத்தின் தொடக்கத்தை வரவேற்று இருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், நாடு சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், இன்று எடுத்திருக்கும் முடிவுகள் அவசியமான ஒன்று என்று கூறி இருக்கிறார்கள்.

dailythanthi