பி.என். அமைச்சர்கள் ஜிஇ வரை முஹைதீனை முழுமையாக ஆதரிப்பர்

பிரதமர் முஹைதீன் யாசின் தலைமைக்கு, தேசிய முன்னணி (பி.என்.) அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் தங்கள் முழு ஆதரவையும் தருவதாக உறுதியளித்தனர்.

பி.என்.ஐச் சேர்ந்த 20 அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர்கள் இதைக் கூறினர்.

இருப்பினும், பொது சுகாதார நிலை சீரமைந்ததும், மக்களின் தெளிவான ஆதரவை நிர்ணயிக்கும் வகையில், கூடிய விரைவில் பொதுத் தேர்தல் (ஜி.இ.) நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

“இந்த நேரத்தில், ஒருமித்த கருத்தினால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம் என்பதையும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம், மக்களுக்குப் பொருளாதார மீட்பு மற்றும் சுகாதார திட்டங்களைச் செயல்படுத்துவதில் பிரதமர் முஹைதீன் யாசின் தலைமைக்கு முழு ஆதரவையும் வழங்குவது உட்பட.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமீடியை பி.என். எம்.பி.க்கள் சந்தித்தப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அமைச்சர்களும் துணையமைச்சர்களும் எந்தவொரு நிபந்தனையும் விதிக்கவில்லை.

இருப்பினும், 2021 வரவு செலவு திட்டம் தொடர்பாக  எம்.பி.க்கள் சமர்ப்பித்த பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைக் கவனத்தில் கொள்வதாக அவர்கள் கூறினர்.