சென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் பல இடங்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே சுற்றி சுழன்று கோர தாண்டவம் ஆடியது. மணிக்கு 150 கி.மீ.,க்கு மேல் வீசிய சூறாவளி காற்றின் ஆக்ரோஷத்தால், மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஏராளமான கட்டட மேற்கூரைகள் காற்றில் பரந்தன. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் துவம்சம் ஆனது. பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

சூறாவளி காரணமாக சென்னையில் 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதில் 233 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 60 மரங்கள் சாய்ந்த நிலையில், பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. அடையாறு மண்டலத்தில் விழுந்த 59 மரங்களில் 48 மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், குறுகலான சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

dinamalar