முஹைதீன் : ஜிஇ15-க்கான ஏற்பாடுகள் குறித்தும் பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

தேசியக் கூட்டணியின் (பி.என்.) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று தலைமை தாங்கினார், அதில் 15-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ15) ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களைத் தொட்டு பேசப்பட்டுள்ளது.

முஹைதீன் தனது முகநூல் பக்கப் பதிவு ஒன்றில், பி.என். உறுப்பு கட்சிகளின் கூட்டணியை நெறிப்படுத்தவும், பி.என். தலைமையிலான அரசாங்கத்தில் கட்சிகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மக்களின் நல்வாழ்வைப் பேணுவதை உறுதி செய்வதற்கான உடனடி திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்தச் சந்திப்பில் விவாதித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சோலிடாரிட்டி தானா ஆயேர்கூ கட்சி (ஸ்டார்) தலைவர் டாக்டர் ஜெஃப்ரி கிட்டிங்கன், மாஜூ சபா கட்சி (எஸ்ஏபிபி) தலைவர் யோங் தெக் லீ, பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அஸுமு மற்றும் உச்சமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், மூன்று கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து அப்துல் ஹாடி மற்றும் அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி ஆகியோருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக பெர்சத்து தலைவருமான முஹைதீன் தெரிவித்தார்.

-பெர்னாமா